Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அனைவருக்கும் என்ன பந்தம்...

அனைவருக்கும் என்ன பந்தம்...

அனைவருக்கும் என்ன பந்தம்...

அனைவருக்கும் என்ன பந்தம்...

ADDED : ஜூன் 13, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
ரத்தம் தானமாகப் பெறப்படும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மனித உடலில் இருக்கவேண்டிய ரத்தத்தின் சராசரி அளவு ஐந்து லிட்டராகும். இது குறையும்போதோ, ரத்த அணுக்களில் பிரச்னைகள் ஏற்படும்போதோ உடல் சீராகச் செயல்படுவதில் சிரமம் ஏற்படும். உடல் இயக்கத்தைச் சீராக்க ரத்தத்தின் தேவை அவசியம். அது தானமாகப் பெறப்பட்டு செலுத்தும்போது எந்தவிதமான நோய்க் கிருமிகளும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். சாலை விபத்து, ஆலை விபத்துகளில் சிக்குவோர், அறுவைசிகிச்சை செய்வோர், பிரசவத்தின்போது கர்ப்பிணிகள், கர்ப்பாகாலங்களில் ரத்தசோகையுள்ளவர்கள் என ரத்தத்தின் தேவையுள்ளவர்கள் அதிகம்.

இன்று உலக ரத்த தான தினம். உதிரம் கொடுப்பது உயிர் காக்கும் உன்னத சேவை என்பதை உணர்ந்து பல ஆண்டுகளாக பலரும் ரத்த தானம் செய்து வருகின்றனர். இதுதொடர்பான விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டும்.

--அரசின் ஊக்குவிப்பு அவசியம்

கடந்த, 16 ஆண்டுகளில், அரசு மருத்துவமனைக்கென்று மட்டும், 1,180 முகாம்கள் வாயிலாக ரத்த தானம் பெற்றுக் கொடுத்துள்ளோம். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மட்டும், 30 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக வழங்கியுள்ளோம். தாராபுரம், பொள்ளாச்சி, கோவை மருத்துவக்கல்லுாரி, உடுமலை உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் ரத்தம் தானமாக வழங்கி வருகிறோம். தற்போதைய காலக்கட்டத்தில் ரத்தம் வழங்க கொடையாளர்கள் முன்வருவது கடினமாக தான் இருக்கிறது.தங்கள் வாழ்நாளில், 50 முறை, 75 முறை, 90 முறை கொடுத்தவர்கள் கூட உள்ளனர். முந்தைய காலங்களில், அதிகம் முறை ரத்த தானம் செய்தவர்கள், மாநில கவர்னர் மற்றும் முதல்வரால் கவுரவிக்கப்பட்டனர்; அவர்களுக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ் போன்றவை வழங்கப்பட்டன. அதுபோன்று ஊக்குவிப்பு இருந்தால், ரத்த தானம் வழங்க அதிகமானவர்கள் முன்வருவர்.

- சிதம்பரம், முயற்சி மக்கள் அமைப்பு தலைவர்

---தயக்கம் தவிர்க்கப்பட வேண்டும்

கடந்த, 12 ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வருகிறோம். எங்கள் குழுவில், 220 பெண்கள் இணைந்துள்ளனர்; இவர்கள் ரத்த தானம் செய்வதுடன், ரத்தக் கொடையாளர்களை ஏற்பாடு செய்தும் கொடுக்கின்றனர். ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களே ரத்தம் கொடுக்க தயங்கும் நிலையை பல இடங்களில் பார்க்க முடிகிறது. இந்நிலை மாற வேண்டும். தங்கள் குடும்பத்தில் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு, ஒத்த ரத்தம் உடைய குடும்ப உறுப்பினர்கள், ரத்தம் கொடுக்க தயங்கக்கூடாது. இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை, மாநிலம் முழுக்க செய்து வருகிறோம்.- ரஹீம் அங்குராஜ், தலைவர்,

'நம்பிக்கை நமது' அமைப்பு

--

முழுமையாக நீங்காத அச்சம்

பல இடங்களில் ரத்த தான முகாம் நடத்தப்படுகிறது; இளைஞர்களிடம் ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. இருப்பினும், ரத்த தானம் செய்தால், உடலில் ரத்தம் குறையும் என்ற அச்சம், மக்கள் மத்தியில் இனியும் இருக்கிறது; இது தவறு. ரத்த தானம் செய்தால், உடல் பருமன் ஏற்படும் என்பதும் தவறான நம்பிக்கை. ரத்த தானம் செய்வோரின் ஹீமோகுளோபின் அளவு, ஆண்களுக்கு, 13; பெண்களுக்கு, 12 என்ற அளவில் இருக்க வேண்டும். ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்ய வருவோரிடம், தங்களுக்கு தெரிந்தவர்களிடம், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வலியுறுத்துகிறோம். கிராமங்களில் ரத்த தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு, சற்று அதிகரிக்க வேண்டும்.

- வித்யா, மருத்துவ அலுவலர்,ரத்த வங்கி, திருப்பூர் அரசு மருத்துவமனை.

---

நன்றி சொல்லும் ஆண்டு

ஒருவரிடம் இருந்து, 350 மி.லி., ரத்தம் சேகரிக்கப்படுகிறது; அதை, 4 பேருக்கு பயன்படுத்தும் அளவுக்கு மருத்துவத்தின் முன்னேற்றம் வந்துள்ளது. 90 நாள் இடைவெளியில் ஒருவர் ரத்தம் வழங்கலாம். 18 முதல், 65 வயதுடைய, உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் ரத்தம் தானமாக வழங்கலாம்.ஆண்டுதோறும், ஜூன் 12ம் தேதி, உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்து முன்வைக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான கருப்பொருளாக, '20 வருடங்களாக ரத்த தானம் கொடுத்தவர்களை கொண்டாடுவோம்; ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி சொல்வோம்' என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us