Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின் கட்டணம் உயரும் என அச்சம் : ஜவுளி தொழில் துறையினர் கவலை

மின் கட்டணம் உயரும் என அச்சம் : ஜவுளி தொழில் துறையினர் கவலை

மின் கட்டணம் உயரும் என அச்சம் : ஜவுளி தொழில் துறையினர் கவலை

மின் கட்டணம் உயரும் என அச்சம் : ஜவுளி தொழில் துறையினர் கவலை

ADDED : ஜூலை 02, 2024 11:46 PM


Google News
பல்லடம்:மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற தகவலால், அச்சத்தில் உள்ள ஜவுளி தொழில் துறையினர், தமிழக அரசின் முடிவு குறித்து எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை ஆணைய அறிவுறுத்தலின் பேரில், ஆண்டுதோறும், மின்கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மின்வாரியத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம் மின் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அச்சத்தில் உள்ள ஜவுளி தொழில் துறையினர், சமூக வலைதளம் வாயிலாக, தமிழக அரசுக்கு தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அதில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள மின் வாரியத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இதனால், எல்.டி.சி.டி., மின் இணைப்பு பெற்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.

இது தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் ராஜா, குறு சிறு தொழில்துறை அமைச்சர் அன்பரசு, நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை கடந்த காலங்களில் நேரில் சந்தித்து, தொழில்துறையின் நிலைமை எடுத்துக்கூறப்பட்டது. இதில், 43 சதவீதம் உயர்த்தப்பட்ட டிமாண்ட் கட்டணத்தையும், சோலார் நெட்வொர்க் கட்டணத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தேர்தலுக்கு முன்பே, தமிழக முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. இதனால், பின் பேசிக் கொள்வோம் என முதல்வர் தெரிவித்தார். தேர்தலில், 40க்கு 40 வெற்றி பெற்ற பின், கோவையில் நடந்த வெற்றி விழாவில், முதல்வர் இது குறித்து பேசுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், பேசவே இல்லை.

இதுவரை தமிழகத்துக்கு மூலப் பொருட்களை வழங்கி வந்த மாநிலங்களில், தொழில் துவங்க ஊக்கமளித்து, மின் கட்டணம் உட்பட மானியங்களை போட்டி போட்டு வழங்கி வருவதால், அண்டை மாநிலங்களில் தொழில்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன.

இதற்கிடையே, மூலப் பொருட்கள் விலை ஏற்றம், வேலை ஆட்கள் தட்டுப்பாடு என, தமிழகத்தில் தொழில் துறை தத்தளித்து வருகிறது.. இனியும் மின்கட்டண உயர்வை தாங்க முடியாது என்பதை அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் தெரிவித்துள்ளோம். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ள, 2 - 6 சதவீத மின் கட்டணத்துக்கு நிதித்துறை பங்களித்தால் தொழில்துறையினர் மீதான சுமை குறையும். தமிழக முதல்வர் தலையிட்டு தொழில் துறையினைரை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய இந்த பதிவு வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டு வரும் நிலையில், தேர்தலின்போது ஓட்டு சேகரிக்க வந்த அமைச்சர்கள் இப்போது எங்கே போனார்கள்? தமிழக அரசு நினைத்தால் மின் கட்டண உயர்வை நிறுத்த முடியாதா? என, பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதுவரை தமிழகத்துக்கு மூலப் பொருட்களை வழங்கி வந்த மாநிலங்களில், தொழில் துவங்க ஊக்கமளித்து, மின் கட்டணம் உட்பட மானியங்களை போட்டிபோட்டு வழங்கி வருவதால், அண்டை மாநிலங்களில் தொழில்கள் வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us