/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணி சந்தை வளாகத்தில் அவலம் பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணி சந்தை வளாகத்தில் அவலம்
பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணி சந்தை வளாகத்தில் அவலம்
பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணி சந்தை வளாகத்தில் அவலம்
பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணி சந்தை வளாகத்தில் அவலம்
ADDED : ஜூன் 11, 2024 11:50 PM

உடுமலை;உடுமலை சந்தை வளாகத்தில், கடைகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஆபத்தான நிலை உள்ளதோடு, வளாகத்தில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
உடுமலை நகராட்சி சந்தைக்கு, உடுமலை சுற்றுப்பகுதிகளில் விளையும், தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என, தினமும், 700 டன் வரை காய்கறிகள் வரத்து உள்ளது.
உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து, காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.
தினசரி சந்தையில், அமைக்கப்படும் கடைகளுக்கு, காய்கறி வாங்க, பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
தரைக்கடைகளில் அமர்ந்து, வியாபாரிகள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், பழைய கடைகளை அகற்றி விட்டு, நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், 6.84 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக, 70 கடைகள் கட்ட, 4 ஆண்டுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டது.
கட்டுமான பணிகள் துவங்கி, ஆண்டுக்கணக்கில் நடந்து வருகிறது. ஒரு பகுதியில் மட்டும் கடைகள் கட்டப்பட்ட நிலையில், முழுமையாக பணி முடிக்கவில்லை.
மற்றொரு பகுதியில், கான்கிரீட் தளம், கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்ட, கம்பிகள், குழி என ஆபத்தான நிலையில் உள்ளது.
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில், புதர் மண்டி காணப்படுவதோடு, மது அருந்தும் மையமாகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் மையமாக மாறியுள்ளது.
ஏற்கனவே, ஆடு வதைக்கூடம், இரண்டு நுண் உரக்குடில்கள் என பல்வேறு காரணங்களில், சந்தை வளாகம் குறுகியுள்ள நிலையில், கடைகள் கட்டும் பணியும் முழுமையாக நிறைவு செய்யாததால், நெரிசல் நிலவுகிறது.
வாகனங்கள் நிறுத்த முடியாமலும், கடைகள் அமைக்க முடியாமலும், சந்தை வளாகத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை, இறக்கி வைத்து விற்பனை செய்ய முடியாமலும், வாகனங்கள் உள்ளே வர முடியாத நிலையும், சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்கள் நிறுத்த முடியாமல், ரோட்டில் நிறுத்த வேண்டிய அவல நிலையும் உள்ளது.
எனவே, சந்தை வளாகத்தில் கடைகள் கட்டுமான பணியை, விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.