Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீமாணிக்கவாசகர் குருபூஜை விழா: மனமுருகி வழிபட்ட சிவனடியார்கள்

ஸ்ரீமாணிக்கவாசகர் குருபூஜை விழா: மனமுருகி வழிபட்ட சிவனடியார்கள்

ஸ்ரீமாணிக்கவாசகர் குருபூஜை விழா: மனமுருகி வழிபட்ட சிவனடியார்கள்

ஸ்ரீமாணிக்கவாசகர் குருபூஜை விழா: மனமுருகி வழிபட்ட சிவனடியார்கள்

ADDED : ஜூலை 10, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சிவனடியார்கள் சார்பில், மாணிக்கவாசகர் குருபூஜை விழா நேற்று நடந்தது. ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில், மாணிக்கவாசகர் சொல்ல, திருவாசகத்தை சிவபெருமான் எழுதியதாக ஐதீகம்.

அடுத்த நாளான, மகம் நட்சத்திர நாளில், மாணிக்கவாசகர் தில்லையில் ஸ்ரீநடராஜருடன் ஜோதியாக கலந்தார். அதன்படி, நேற்று, சிவாலயங்களில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மகா மண்டபத்தில் காட்சியளிக்கும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் மாணிக்கவாசகர் திருமேனிகளுக்கும், மாணிக்கவாசகர் உற்சவமூர்த்திக்கும் மகா அபிேஷகம் நடந்தது.

காசியில் இருந்து எடுத்துவரப்பட்ட காசி தீர்த்தம் உட்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், தனி சப்பரத்தில் எழுந்தருளிய மாணிக்கவாசகர் உற்சவமூர்த்தி, உள்பிரகாரத்தை வலம் வந்து, கனகசபையில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜபெருமானுடன் ஐக்கியமானார். சிவனடியார்களும், பக்தர்களும், திருவாசக பதிகங்களை பாராயணம் செய்து, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

விழாவில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், நல்லுார் ஈஸ்வரன் கோவில் அறங்காவலர் சிவக்குமார் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us