/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மலை கிராமங்களில் சிறுதானிய சாகுபடி வேளாண்துறை உதவ எதிர்பார்ப்பு மலை கிராமங்களில் சிறுதானிய சாகுபடி வேளாண்துறை உதவ எதிர்பார்ப்பு
மலை கிராமங்களில் சிறுதானிய சாகுபடி வேளாண்துறை உதவ எதிர்பார்ப்பு
மலை கிராமங்களில் சிறுதானிய சாகுபடி வேளாண்துறை உதவ எதிர்பார்ப்பு
மலை கிராமங்களில் சிறுதானிய சாகுபடி வேளாண்துறை உதவ எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 30, 2024 02:08 AM
உடுமலை;தென்மேற்கு பருவமழையை பயன்படுத்தி, சாகுபடி மேற்கொள்ள, வேளாண்துறை சார்பில், சிறு தானிய சாகுபடி சிறப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில், அங்கு வசிக்கும் மக்கள், தங்கள் உணவிற்காக பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, நெல், சிறு தானியங்கள் மற்றும் மொச்சை ஆகிய சாகுபடி மலைவாழ் மக்களால், பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. விளைபொருட்களை சமவெளிக்கு கொண்டு வந்தும், விற்பனை செய்கின்றனர்.
தொழில்நுட்ப விழிப்புணர்வு இல்லாதது மற்றும் விதை உட்பட இடுபொருட்கள் கிடைக்காததால், சில ஆண்டுகளுக்கு முன், சிறு தானிய சாகுபடியை பெரும்பாலான மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.
குறிப்பாக, குழிப்பட்டி, மாவடப்பு, கோடந்துார் போன்ற மலைவாழ் குடியிருப்புகளில், சாமை, ராகி போன்ற சிறு தானிய சாகுபடிகள் முற்றிலுமாக காணாமல் போனது.
இது குறித்து, மலைவாழ் மக்கள் அளித்த தொடர் மனுக்கள் அடிப்படையில், சிறப்பு திட்டத்தின் கீழ், குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிகொட்டான்பாறை, ஆட்டுமலை, கோடந்துார் ஆகிய மலைவாழ் குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
அங்குள்ள மக்களுக்கு, ராகி, சாமை ஆகிய விதைகள் மானியத்தில், வேளாண்துறையால் வழங்கப்பட்டன.
பின்னர், நுண்ணுாட்ட சத்து உட்பட இடுபொருட்களும், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறையினர் வழங்கினர். இத்திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படவில்லை.
தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த சீசனில், விளைநிலங்களில், பல்வேறு சாகுபடி மேற்கொள்ள மலைவாழ் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
எனவே, வேளாண்துறையினர் இந்த சீசனில், சிறு தானிய சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.