Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பாதிப்பு நோய் தடுப்பு நடவடிக்கை அவசியம்

பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பாதிப்பு நோய் தடுப்பு நடவடிக்கை அவசியம்

பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பாதிப்பு நோய் தடுப்பு நடவடிக்கை அவசியம்

பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பாதிப்பு நோய் தடுப்பு நடவடிக்கை அவசியம்

ADDED : ஜூலை 30, 2024 01:19 AM


Google News
உடுமலை;உடுமலை ஒன்றியத்தில், பருவநிலை மாற்றத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை, சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது மாநிலம் முழுவதும், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், நோய்கள் பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. தற்போது ஆடி மாதமாக இருப்பினும், பரவலான மழையாக தொடர்கிறது. வெப்பம் அதிகரிப்பதும், மழைபொழிவதுமாக பருவநிலை சீரில்லாமல் உள்ளது.

இந்த மாற்றத்தினால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பரவலும் அதிகரிக்கிறது. சளி, காய்ச்சல், கிருமி தொற்றுகள் என கிராமப்பகுதிகளில் அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குடியிருப்புகளின் அருகில் சுகாதாரம் இல்லாதது, திறந்த வெளியில் தொடர்ந்து பல நாட்களாக குப்பைக்கழிவுகள் மழைநீரில் தேங்கி இருப்பது போன்ற காரணங்களால், தொற்றுகளும் அதிகம் பரவி வருகின்றன.

இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பருவநிலை மாற்றத்தையொட்டி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் கிராமப்பகுதிகளில் தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிராம மக்கள் கூறியதாவது: மாலை நேரத்தில் மட்டுமின்றி, தற்போது காலையிலும் கொசுத்தொல்லை அதிகரிக்கிறது. கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். கொசுப்புழு ஒழிப்புக்கு ஒன்றிய நிர்வாகம் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குடிநீரும் முறையாக வருவதில்லை. நீண்ட நாட்கள் வைத்திருப்பதால் அவற்றிலும் புழுக்கள் வருகிறது. கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

குடிநீர் சுழற்சி முறையில், குறுகிய இடைவெளியில் வினியோகிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடியாக மேற்கொண்டு உரிய தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us