/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துாய்மை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை: மோசமான நிலையில் சுகாதாரம்! புகார்களை அடுக்கிய மாநகராட்சி கவுன்சிலர்கள் துாய்மை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை: மோசமான நிலையில் சுகாதாரம்! புகார்களை அடுக்கிய மாநகராட்சி கவுன்சிலர்கள்
துாய்மை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை: மோசமான நிலையில் சுகாதாரம்! புகார்களை அடுக்கிய மாநகராட்சி கவுன்சிலர்கள்
துாய்மை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை: மோசமான நிலையில் சுகாதாரம்! புகார்களை அடுக்கிய மாநகராட்சி கவுன்சிலர்கள்
துாய்மை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை: மோசமான நிலையில் சுகாதாரம்! புகார்களை அடுக்கிய மாநகராட்சி கவுன்சிலர்கள்
ADDED : ஜூலை 17, 2024 01:27 AM

அனுப்பர்பாளையம்;முதலாம் மண்டல வார்டுகளில், துாய்மை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையால், குப்பை குவிந்து சுகாதாரம் கேள்விக்குறியாகி விட்டதாக, கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டல கூட்டம் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில், உதவி கமிஷனர் ராமசாமி, முன்னிலையில் நடைபெற்றது.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
புஷ்பலதா (அ.தி.மு.க.,): குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியால் தினமும் விபத்து நடக்கிறது. பணியை விரைவாக முடிக்க வேண்டும். குடிநீர் லீக்கேஜ் அதிகமாக உள்ளது. இதனால், வீடுகளுக்கு குடிநீர் குறைவாக வருகிறது. தெருவிளக்கு சரியாக எரிவதில்லை.
குமார் (ம.தி.மு.க.,): பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் வர்ணம் பூசாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர்.
கவிதா (அ.தி.மு.க.,): துப்புரவு பணியாளர்கள், 33 பேருக்கு 12 - 15 பேர் மட்டுமே வருகின்றனர். குப்பை எடுக்கும் பேட்டரி வண்டி ஒன்பதுக்கு, 5 மட்டுமே வருகிறது. சாக்கடை சுத்தம் செய்யாததால், துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரம் படும் மோசமான நிலையில் உள்ளது. குடிநீர் எட்டு நாட்களுக்கு ஒரு முறையே வருகிறது. நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
கோபால்சாமி (தி.மு.க.,): பாதாள சாக்கடை பணியால் அதிக அளவில் குடிநீர் குழாய் சேதமாகிறது. புதிய தெரு விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. குடிநீர் லீக்கேஜ் அதிகமாக உள்ளது.
செழியன் (த.மா.கா.,): பூஜை போடப்பட்ட பல பணிகள் பல மாதங்கள் ஆகியும் தொடங்கப்படாமல் உள்ளது. தரம் இல்லாத பைப்பால் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.
உதவி கமிஷனர்: ஒப்பந்ததாரர்களை அழைத்து, பணி குறித்து பேச உள்ளோம். பணி தாமதம் செய்யும் ஒப்பந்ததாரர் குறித்து கமிஷனருக்கு தகவல் தெரிவித்து, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்ச்செல்வி (அ.தி.மு.க.,): சக்தி தியேட்டர் வீதி, ஆயில் மில் வீதி, தேவி பள்ளி வீதி, இந்திரா நகர் ஆகியவற்றில் அமைக்கப்பட்ட புதிய ரோடு தரம் இல்லாமல் உள்ளது. துப்புரவு பணியாளர்கள், 20 பேர் பற்றாக்குறை யாக உள்ளது. இதனால், சுகாதார பணி பாதிக்கப்படுகிறது.
முத்துசாமி (அ.தி.மு.க): மூன்றாவது திட்ட குடிநீர் குறைவாக வருகிறது. நான்காவது திட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி மேடான பகுதியில் இருப்பதால் குடிநீர் ஏறுவதில்லை. இதனால் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. சுகாதார பணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ராஜேந்திரன் (இ.கம்யூ.,): மாநகராட்சி ஊழியர்கள் சிலர் சொத்து வரி போட்டு தருவதாக பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றி உள்ளனர். அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 4வது திட்ட குடிநீர் குழாய் பதிக்கும் பணி முறையாக செய்யப்படாததால், பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து வருகிறது.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசிய பின், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.