Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முறைகேடு ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு

முறைகேடு ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு

முறைகேடு ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு

முறைகேடு ஆலைகள் மின் இணைப்பு துண்டிப்பு

ADDED : ஜூலை 22, 2024 12:28 AM


Google News
திருப்பூர்;திருப்பூரில், முறைகேடாக இயங்கிய மூன்று ஆலைகளின் மின் இணைப்பு, கடந்த வாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

'நீர்நிலைகளில் கலக்கும் சாயக்கழிவு' என்ற தலைப்பில், 'தினமலர்' நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி முறைகேடாக இயங்கி வரும் ஆலைகள் மீது தீவிர நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளால், நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வின் போது, அனுமதியின்றி இயங்கி வரும், பட்டன் ஜிப், பிரின்டிங் தொழிற்சாலைகள் முறைகேடாக இயங்குவது தெரியவந்தால், மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு குழு வாயிலாக, மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஆலையை மூடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த ஏப்., மாதத்தில் இருந்து, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு வாயிலாக, 23 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக இயங்கிய மூன்று ஆலைகள், கடந்த வாரம் மூடப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சாயக்கழிவு வெளியேறுவது தெரியவந்தால், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்துக்கு, 80560 33416, உதவி பொறியாளரை, 78455 52693, பறக்கும்படை சுற்றுச்சூழல் பொறியாளர் 78455 52938 என்ற எண்களில் அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாடகைக்கு விடும் முன் கவனம்

பொதுமக்கள், தங்கள் நிலத்தையோ, கட்டடத்தையோ, அனுமதி பெறாத தொழிலுக்கு வாடகைக்கு விட வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. தங்கள் குடியிருப்புகளுக்கு அருகே, சாயக்கழிவை வெளியேற்றும் ஆலைகள் குறித்தும், நீர் நிலைகளில் வெளியேற்றப்பட்டு, நிறம் மாறுவது குறித்தும், பொதுமக்கள் பறக்கும் படையிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us