Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'இன்டெக்ஸ்' ஆயத்த ஆடை கண்காட்சி இலங்கையில் ஆக., 7ல் துவங்குகிறது

'இன்டெக்ஸ்' ஆயத்த ஆடை கண்காட்சி இலங்கையில் ஆக., 7ல் துவங்குகிறது

'இன்டெக்ஸ்' ஆயத்த ஆடை கண்காட்சி இலங்கையில் ஆக., 7ல் துவங்குகிறது

'இன்டெக்ஸ்' ஆயத்த ஆடை கண்காட்சி இலங்கையில் ஆக., 7ல் துவங்குகிறது

ADDED : ஜூலை 10, 2024 01:57 AM


Google News
திருப்பூர்;'இன்டெக்ஸ்' சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி, இலங்கை தலைநகர் கொழும்புவில், ஆக., 7ல் துவங்கி மூன்று நாள் நடக்கிறது.

தெற்காசிய ஜவுளி சந்தைகளை வலுப்படுத்தி, புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 'இன்டெக்ஸ்' கண்காட்சி, ஒவ்வொரு ஆண்டும், இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. அவ்வகையில், 15வது கண்காட்சி, வரும் ஆக., 7ம் தேதி இலங்கையில் துவங்குகிறது.

'பிராண்ட்' நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், ஏஜன்டுகள், வர்த்தகர்கள், வர்த்தக முகமைகள் என, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில் சார்ந்த அமைப்புகள் பங்கேற்கின்றனர். சீனா, ஹாங்காங், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் பங்கேற்க உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின், இலங்கை ஆயத்த ஆடை தொழிலை வலுப்படுத்த, அந்நாட்டு அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதில், இந்திய வர்த்தகர்களும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.

'இன்மேக்' கண்காட்சி


கண்காட்சியின் ஒரு பகுதியாக, புதிய வகை மெஷின்களை காட்சிப்படுத்தும், 'இன்மேக்' என்ற சர்வதேச பின்னலாடை தொழில்நுட்ப இயந்திர கண்காட்சியும் நடக்கிறது. இலங்கை அரசு, 2025ம் ஆண்டுக்குள், 67 ஆயிரத்து, 200 கோடி (8 பில்லியன் டாலர்) ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்துள்ளது. அதற்காக, புதிய வகை இயந்திரங்களில் முதலீடு செய்யவும் தயாராகிவிட்டது. அதற்காகவே, புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும், 'இன்மேக்' கண்காட்சியும் நடத்தப்படுகிறது. கண்காட்சியில் பங்கேற்க வருவோருக்கு, ஓட்டல், போக்குவரத்து சலுகைகள் வழங்கப்படும்; தொழில்நுட்ப பகிர்வுக்காக, சர்வதேச நிபுணர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டங்களும் நடத்தப்பட இருப்பதாக, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us