Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வன எல்லை சோலார் மின் வேலியால் பயனில்லை புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வன எல்லை சோலார் மின் வேலியால் பயனில்லை புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வன எல்லை சோலார் மின் வேலியால் பயனில்லை புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வன எல்லை சோலார் மின் வேலியால் பயனில்லை புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 20, 2024 12:12 AM


Google News
உடுமலை;வன எல்லையில், வனத்துறையால் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலிகள் பராமரிக்கப்படாததால், வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

உடுமலையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:

எலையமுத்துார் பகுதியில், கருவேலன் மரங்கள் வெட்டி கடத்தப்படுகிறது. குறிச்சிக்கோட்டை மலையடிவாரத்தில், அரசுக்கு சொந்தமான நிலத்தில், சட்ட விரோதமாக மண் கடத்தப்பட்டு வருகிறது.

வேளாண் பொறியியல் துறை, வாடகைக்கட்டடத்தில் செயல்படுகிறது. ஒருங்கிணைந்த வேளாண் மையத்தில் இடம் உள்ள நிலையில் ஒதுக்கித்தர வேண்டும்.

வாளவாடி, குடிமங்கலம் பகுதிகளில், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள், ஏராளமாக பயன்படுத்தாமல் வீணாக உள்ளது. அவற்றை விவசாயம் செய்யும் வகையில், முறைப்படி ஏலம் விட வேண்டும்.

மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்திற்கு செல்லும், 600 மீட்டர் வழித்தடம், மண் ரோடாக உள்ளது. பேரூராட்சி வசம் ஒப்படைத்து, ரோடு அமைக்க வேண்டும்.

மலைவாழ் மக்களுக்கு பயன்படும் வகையில், ரோடு அமைக்க அரசு நிதி ஒதுக்கியும், வனத்துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதோடு, விவசாயிகளை துாண்டி விடுகின்றனர்.

வன எல்லை கிராமங்களுக்கும், யானை, காட்டுப்பன்றிகள் நுழைந்து, மரங்கள், பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறை சார்பில், எல்லையில், சோலார் மின் வேலி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து, பேட்டரி, இன்வெட்டர் ஆகியவற்றை அவர்களே எடுத்துச்சென்றனர். அதற்கு பின் கண்டு கொள்ளவில்லை; எனவே, வன எல்லையிலுள்ள சோலார் மின் வேலிகளை புதுப்பிக்க வேண்டும்.

தென்னை மரங்களில் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து, தற்போது வேகமாக பரவி வருகிறது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய மருந்து, தொழில்நுட்ப உதவிகள் வழங்க வேண்டும்.

பருவ மழை துவங்கியுள்ள நிலையில், சோளம், மொச்சை, தட்டை உள்ளிட்ட பயிர்களின் விதைகள் மற்றும் இடு பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

கண்ணமநாயக்கனுாரில், 6.67 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குட்டை மற்றும் நீர் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளாக விவசாயிகள் மனு அளித்தும், இரு முறை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு உறுதி செய்தும், இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. உடனடியாக அகற்றி, துார்வாரி, மழை நீர் சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு, பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us