/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திறந்தவெளி 'பார்' ஆன பாசன குளம் கழிவுகளால் கலங்கும் விவசாயிகள் திறந்தவெளி 'பார்' ஆன பாசன குளம் கழிவுகளால் கலங்கும் விவசாயிகள்
திறந்தவெளி 'பார்' ஆன பாசன குளம் கழிவுகளால் கலங்கும் விவசாயிகள்
திறந்தவெளி 'பார்' ஆன பாசன குளம் கழிவுகளால் கலங்கும் விவசாயிகள்
திறந்தவெளி 'பார்' ஆன பாசன குளம் கழிவுகளால் கலங்கும் விவசாயிகள்
ADDED : ஜூலை 10, 2024 01:45 AM
உடுமலை;முக்கிய நீராதாரங்கள் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டுள்ளதால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக மாறியும், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
உடுமலை ஏழு குள பாசனம் வாயிலாக, நேரடியாக, 2 ஆயிரத்து ஏக்கர் பாசனம் பெறுகிறது. சுற்றுப்பகுதியிலுள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக, ஏழு குள பாசன திட்ட குளங்கள் உள்ளன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளங்கள் தற்போது, பிளாஸ்டிக் கழிவுகளால், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
'பார்' ஆக மாறியது
ஏழு குள பாசன திட்ட குளங்களில், பெரிய குளம், 404 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. பரந்து விரிந்துள்ள இக்குளத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவும், உபரி நீர் வெளியேறவும், ஆங்காங்கே ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஷட்டர்களை பகல் மற்றும் இரவு நேரங்களில், 'குடி'மகன்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஷட்டரிலும், ஒரு கூட்டம், அமர்ந்து, மது அருந்துவது வாடிக்கையாகியுள்ளது.
மது அருந்தி விட்டு, காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர கழிவுகளை ஷட்டர் பகுதியிலேயே வீசிச்செல்கின்றனர்.
அனைத்து கழிவுகளும், குளத்து நீரில், கலந்து மாசு ஏற்படுகிறது; ஷட்டருக்குள் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசுவதால், அடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்கும் போது சிக்கல் உருவாகிறது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும், கழிவுகளால், பாதிக்கின்றன.
இவ்வாறு, பெரியகுளம் கரை மற்றும் ஷட்டர் பகுதியில் மட்டும், தற்போது, பல டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளும் இப்பிரச்னையை கண்டுகொள்வதில்லை. இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட வேண்டும்.