Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாழடைந்த அரசு அலுவலகம்; 'பார்' ஆனது! தரைமட்டமாகும் கட்டமைப்புகள்

பாழடைந்த அரசு அலுவலகம்; 'பார்' ஆனது! தரைமட்டமாகும் கட்டமைப்புகள்

பாழடைந்த அரசு அலுவலகம்; 'பார்' ஆனது! தரைமட்டமாகும் கட்டமைப்புகள்

பாழடைந்த அரசு அலுவலகம்; 'பார்' ஆனது! தரைமட்டமாகும் கட்டமைப்புகள்

ADDED : ஜூன் 05, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
உடுமலை;உடுமலையில், செயல்பாடில்லாமல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் 'குடி'மகன்களின் 'பார்' ஆக மாறிவிட்டது.

உடுமலை வட்டாரத்துக்குட்பட்டு, 138 அங்கன்வாடி மையங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், செயல்படுகின்றன. குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கான அரசு அலுவலகம் ஜீவா நகரில் உள்ளது.

ஆனால் அலுவலக கட்டடம் மோசமான நிலையில் சிதிலமடைந்து, இடியும் நிலைக்கு வந்ததால், பல ஆண்டுகளாக அலுவலகம் வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது.

கடந்த 2016ம்ஆண்டு முதல், சர்தார் வீதியிலுள்ள வாடகை கட்டடத்தில் அலுவலகம் செயல்படுகிறது. பல ஆண்டுகளாகியும், அரசு கட்டடத்தை புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.தற்போது பழைய அலுவலக கட்டடம், காண்காணிப்பும் இல்லாமல் திறந்து கிடப்பதுடன், பழைய ஆவணங்களும் பாதுகாப்பில்லாமல் அலுவலகத்தில் உள்ளது. மேலும் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு இல்லாமல் கேட்பாரற்று இருப்பதால், 'குடி'மகன்கள் சுதந்திரமாக இந்த கட்டடத்தை 'பார்' ஆக பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் பாதுகாப்பில்லாமல் உள்ளது.

தற்போது அலுவலகம் இயங்கி வரும் கட்டடத்துக்கு, மாதம்தோறும் 6 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வாடகை செலுத்தப்படுகிறது. கடந்த, 2016 முதல், எட்டு ஆண்டுகளாக மொத்தமாக இதுவரை வாடகைக்கு மட்டுமே, 5 லட்சம் ரூபாய் வரை அரசு செலவு செய்துள்ளது. ஆனால் புதிய கட்டடம் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல், பழுதடைந்து நிற்கும் வாகனத்தை கூட அப்புறப்படுத்தாமல், 'குடி'மகன்களுக்கு மேலும் வசதியாக அலுவலக இடம் புதராக மாறியுள்ளது.

தற்போதுள்ள அலுவலகத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கான கூட்டம் நடத்துவதற்கு போதிய இடவசதிகள் இல்லை. இதனால் பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் கூட்டம் நடத்தப்படுகிறது. அரசு கட்டடம் இருந்தும் அதை புதுப்பிக்காமல், தொடர்ந்து வாடகை கட்டடத்தில் அலுவலகம் இயங்குவதை, சம்பந்தபட்ட சமூக நலத்துறையும் கண்டுகொள்ளாமல் உள்ளது.

பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி, புதிய அலுவலகம் கட்டுவதற்கு அத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us