/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேளாண் துறையில் பணி நியமனம் ;அலுவலர்கள் குழப்பம் வேளாண் துறையில் பணி நியமனம் ;அலுவலர்கள் குழப்பம்
வேளாண் துறையில் பணி நியமனம் ;அலுவலர்கள் குழப்பம்
வேளாண் துறையில் பணி நியமனம் ;அலுவலர்கள் குழப்பம்
வேளாண் துறையில் பணி நியமனம் ;அலுவலர்கள் குழப்பம்
ADDED : ஜூலை 06, 2024 10:42 PM
திருப்பூர்;விவசாயிகளுடன் நேரடி தொடர்பில் உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் செயல்படுகின்றனர். களப்பணியில் ஈடுபடும் இவர்களின் பணிச்சுமையை குறைக்கவும், அரசின் திட்டங்கள், முழு அளவில் விவசாயிகளை சென்றடையும் நோக்கில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' நடைமுறைக்கு வரும்' என, கடந்த மார்ச் மாதம் நடந்த வேளாண் பட்ஜெட்டில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். சமீபத்தில், இதுதொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.
'இத்திட்டத்தின் படி, 3 முதல் 4 வருவாய் கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமிக்கப்படுவர்; ஒருவர், 1,200 ஏக்கர் பரப்பளவில் கண்காணிப்பு பணி மேற்கொள்வார்' என, அறிவிக்கப்பட்டது. அத்துடன் வேளாண்மை, தோட்டக்கலை, மலைப்பயிர்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம், வேளாண் பொறியியல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கிராம அளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த முடியும் எனவும் அரசு நம்பிக்கையளித்தது. ஆனால், இத்திட்டம் இதுவரை அமலுக்கு வரவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு, 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும், 48 வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி நியமன ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இது, வேளாண் துறையினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
துறை அலுவலர்கள் கூறுகையில், 'உழவர் தொடர்பு அலுவலர் 2.0' திட்டம் அமலுக்கு வரும் போது, துறைகள் இணைக்கப்பட்டு, 'விரிவாக்க அலுவலர்' என்ற பணியிடம் தான் உருவாக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி, தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. உழவர் தொடர்பு அலுவலர் திட்டத்தில் அரசின் நிலைபாடு என்னவென்பது, புரியாத புதிராகவே உள்ளது' என்றனர்.