Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாழ்க்கையை மாற்றப் போகும் 180 நிமிடம்; டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு அற்புத ஆலோசனைகள்

வாழ்க்கையை மாற்றப் போகும் 180 நிமிடம்; டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு அற்புத ஆலோசனைகள்

வாழ்க்கையை மாற்றப் போகும் 180 நிமிடம்; டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு அற்புத ஆலோசனைகள்

வாழ்க்கையை மாற்றப் போகும் 180 நிமிடம்; டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு அற்புத ஆலோசனைகள்

ADDED : ஜூன் 07, 2024 12:59 AM


Google News
திருப்பூர்;வரும், 9ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு நடத்தப்படவுள்ள நிலையில், பதட்டமின்றி தேர்வு எழுதி முடிப்பது குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தன்னார்வ பயிற்சி மைய தலைமை பயிற்சியாளர் டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் அளித்த பேட்டி:

டி.என்.பி.எஸ்.சி., குரூப் -4 தேர்வெழுதுவோருக்கான 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு விட்டது. அதில், குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரே பெயரில் இரண்டு மூன்று கல்வி நிறுவனங்கள் செயல்படுவதால், செல்ல வேண்டிய மையம் எது, என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

வாய்ப்பிருந்தால், முதல் நாள் மையத்திற்கு சென்று பார்த்து விடுவது நல்லது. காலை, 8:30 மணிக்குள் தேர்வு அறைக்கு வரவேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தால், பயணிக்க வேண்டிய நேரத்தை அவசியமாக திட்டமிட வேண்டும்.

வேண்டாம் சந்தேகம்


'பிரின்ட் அவுட்' எடுக்கப்பட்ட 'ஹால் டிக்கெட்', இரண்டு 'பால் பாயின்ட்' பேனா, ஆதார் கார்டு அல்லது புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும். ஓ.எம்.ஆர்., விடைத்தாளை பூர்த்தி செய்வது குறித்து சந்தேகம் இருந்தால், அறை கண்காணிப்பாளரிடம் கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்ட பின், விடைத்தாளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அமர்ந்திருக்கும் இருக்கையில் வேறு ஏதேனும் துண்டுச்சீட்டு, பாடக் குறிப்பு அடங்கிய புத்தகங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வினாவுக்குள் விடை


தமிழ் பாடப்பகுதி வினாக்களுக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் விடையளித்து விட வேண்டும். 'ஆப்டிடியூட்' பகுதியில், சில சமயம் சில கணக்குகளை நீண்ட நேரம் செய்து பார்க்க வேண்டியிருக்கும். அதுபோன்ற வினாக்களுக்கு, நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம்; கடைசியாக கூட செய்து கொள்ளலாம்.

இப்பகுதி வினாக்களுக்கு விடையளிக்கும் போது, கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளை 'அப்ளை' செய்து, விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்; இது, முழுமையாக அந்த கணக்கை செய்து பார்ப்பதை விட எளிமையானது.

வரிசை தவறக்கூடாது


இயன்றவரை வரிசையாக, அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து விடுவது நல்லது. உதாரணமாக, 15வது கேள்வியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டு, 16வது கேள்விக்கு விடை எழுதும் போது, அதற்கான விடையை விடைத்தாளில், 15வது கேள்வியில் தவறுதலாக குறித்து விடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

அப்படி நேர்ந்து விட்டால், அடுத்து வரும் அனைத்து கேள்விகளுக்குமான விடையும் தவறாகிவிடும். எனவே, விடையை உறுதிப்படுத்திய பின், 'மார்க்' செய்ய வேண்டும். ஒரு முறை எழுதிய பின், அடித்து எழுத முடியாது.

கண்கள் ஏமாறும்


ஒவ்வொரு வினாவையும், நன்றாக புரிந்து விடையளிக்க வேண்டும். சில வினாக்கள் பார்த்த மாத்திரத்தில் கண்களை ஏமாற்றி விடும். உதாரணமாக, 'கீழ்க்கண்ட நுால்களில் பாரதியார் எழுதாத நுால் எது?' என கேட்கப்பட்டிருக்கும். ஆனால், முதல் பார்வையில் 'பாரதியார் எழுதிய நுால் எது' என தெரிய வாய்ப்பிருக்கிறது.

தேர்வெழுதி முடித்த பின், தற்போதைய புதிய நடைமுறையாக கொண்டு வரப்பட்டுள்ள, எத்தனை வினாக்களுக்கு, 'ஏ,பி.சி.டி.,' ஆப்ஷன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதையும், எத்தனை வினாக்களுக்கு விடையளிக்கவில்லை என்பதையும் குறித்துக் காட்ட வேண்டும்.

கூட்டு எண்ணிக்கை, 200 வர வேண்டும். 3 மணி நேர தேர்வில் ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை மாற்றப்போகும் தருணம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us