Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ திருச்செந்துாரில் அதிகரிக்கும் அத்துமீறல் கோவில் நிர்வாகம் புகார் மீது போலீஸ் நடவடிக்கை வருமா?

திருச்செந்துாரில் அதிகரிக்கும் அத்துமீறல் கோவில் நிர்வாகம் புகார் மீது போலீஸ் நடவடிக்கை வருமா?

திருச்செந்துாரில் அதிகரிக்கும் அத்துமீறல் கோவில் நிர்வாகம் புகார் மீது போலீஸ் நடவடிக்கை வருமா?

திருச்செந்துாரில் அதிகரிக்கும் அத்துமீறல் கோவில் நிர்வாகம் புகார் மீது போலீஸ் நடவடிக்கை வருமா?

ADDED : மார் 17, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி: முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில், பல்வேறு வகையிலான வரம்பு மீறல்கள் பக்தர்களுக்கும், கோவில் வளாகத்திலும், செல்லும் வழியிலும் அதிகமாக உள்ளது. இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் சார்பிலும், காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கூறியதாவது:

கோவில் வளாகத்தில் வியாபாரிகள் போர்வையில் சுற்றித்திரிவோர், கையில் தாம்பூல கவர்களை வைத்துக் கொண்டு கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனர். கடற்கரையில் புனித நீராட செல்வோருக்கும், வியாபாரிகள் போர்வையில் சுற்றிவருவோரால் அச்சுறுத்தல் உள்ளது.

கடற்கரை பகுதிகளில், சங்கு விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர், பக்தர் ஒருவரை சமீபத்தில் கத்தியால் தாக்கி கையில் காயம் ஏற்படுத்தினார். அவரை கோவில் பாதுகாப்பு அலுவலர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர்.

கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் நறுக்கிய பழங்கள், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை அழுகிய நிலையிலும், சுகாதாரமற்ற முறையிலும் சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

கோவில் வளாகத்தில் யாசகர்கள் சிலர் ஆங்காங்கே அமர்ந்துள்ளனர். இவர்களில் சிலரும், திருநங்கையர் பெயரில் சிலரும் வரம்பு மீறி செயல்படுகின்றனர்.

கோவில் வளாகத்தில் அவர்கள் தகாத வார்த்தைகளால் அடிக்கடி மோதி கொள்கின்றனர். கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவோரை, இந்த செயல் முகம் சுளிக்க வைக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவில் வளாகத்தில் வரம்பு மீறி செயல்படும் சிறு வியாபாரிகள், திருநங்கையர் மற்றும் பக்தர்களிடம் தகராறு செய்வோர் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தி பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என நம்புகிறோம். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us