ADDED : செப் 02, 2025 11:58 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி கடற்கரையில் தருவைகுளம் மரைன் போலீசார், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த ஐச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினர்.
வாகனத்தில் போலீசார் சோதனை நடத்தியதில், போதை மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி இலை பண்டல்கள் இருந்ததும், அவற்றை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மதிப்பு, 2.5 கோடி ரூபாய். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.