Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/ வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.1.31 கோடி நகை கையாடல்

வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.1.31 கோடி நகை கையாடல்

வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.1.31 கோடி நகை கையாடல்

வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.1.31 கோடி நகை கையாடல்

ADDED : மே 24, 2025 02:23 AM


Google News
திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வேப்பஞ்சேரியில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இதில், செயலராக முருகானந்தம் பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கியில், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், தங்க நகைகளை அடகு வைத்து, கடன் பெற்றுள்ளனர்.

விவசாயிகளுக்கும் கடன் வழங்கப்படுகிறது. வங்கியில், 6 சவரன் தங்க நகையை அடகு வைத்த பெண் ஒருவர், நகையை மீட்க சென்றுள்ளார். வங்கியில், அவர் அடகு வைத்த நகை இல்லை.

இதுபோல பொதுமக்கள், விவசாயிகள் நகைகளை மீட்க சென்றபோது, அவர்கள் அடகு வைத்த நகைகள் வங்கியில் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக, கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

நேற்று முன்தினம், நகைகளை அடகு வைத்த ஆறு பேர், நகைகளை மீட்டுத்தரக்கோரி, கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். துணை பதிவாளர் நேரடி விசாரணை நடத்தினார். வங்கியில் ஆய்வு செய்ததில், 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 498 சவரன் தங்க நகைகள் அடகு வைத்தது போல கணக்கில் உள்ளது.

ஆனால், வங்கியில் நகைகள் இல்லை. விசாரணையில், செயலர் முருகானந்தம் கையாடல் செய்திருப்பது கண்டறியப்பட்டது. அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். நேற்று, திருவாரூர் எஸ்.பி.,யிடம், முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, துணை பதிவாளர் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us