Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணி மந்தம் டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வருமா?

வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணி மந்தம் டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வருமா?

வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணி மந்தம் டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வருமா?

வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணி மந்தம் டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வருமா?

ADDED : ஜூன் 04, 2025 02:39 AM


Google News
Latest Tamil News
வேப்பம்பட்டு:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், கடவுப்பாதை 14ல் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இப்பகுதியில், வேப்பம்பட்டு - பெருமாள்பட்டு பகுதிகளை இணைக்கும் வகையில், கடந்த 2009ம் ஆண்டு 29.5 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது.

கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலை துறையால் துவக்கப்பட்ட பணிகள், பகுதிவாசிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் தடைபட்டது. 2022 டிசம்பர் மாதம் வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, இடைக்கால தடை விலக்கிக் கொள்ளப்பட்டும் பணிகள் துவக்கப்படாமல் இருந்தன.

கடந்த பிப்ரவரி மாதம் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின் படி, 37.72 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பால பணி துவங்கிய நிலையில், மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால், பயணியர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த 2023 நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தை கடந்தபோது, தந்தை மற்றும் இரு மகள்கள், ரயில் மோதி உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாதியில் நிற்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ரயில்வே மேம்பால பணிகளுக்கு, 2024 மார்ச் மாதம் 24 கோடி 18 லட்சத்து 83 ஆயிரத்து 895 ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, டிசம்பர் மாதம் வேப்பம்பட்டு ரயில் நிலைய மேம்பால பணி துவங்கியது.

தற்போது, ரயில்வே மேம்பால பணிகள் மந்தகதியில் நடந்து வருவதாக பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், போக்குவரத்து வசதிக்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் வேப்பம்பட்டு ரயில் நிலைய மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிசம்பர் மாதம் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் வகையில், ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.

- நெடுஞ்சாலை துறை அதிகாரி,

திருவள்ளூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us