Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அம்மையார்குப்பத்தில் போதை நபர்கள் அட்டூழியம் புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுமா?

அம்மையார்குப்பத்தில் போதை நபர்கள் அட்டூழியம் புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுமா?

அம்மையார்குப்பத்தில் போதை நபர்கள் அட்டூழியம் புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுமா?

அம்மையார்குப்பத்தில் போதை நபர்கள் அட்டூழியம் புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுமா?

ADDED : ஜூன் 16, 2025 02:22 AM


Google News
Latest Tamil News
ஆர்.கே.பேட்டை:அம்மையார்குப்பத்தில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில் நெசவாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். விசைத்தறிகளில் இரவு, பகல் என, தொடர்ந்து 24 மணி நேரமும் நெசவாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

இதனால், இரவு முழுதும் கண் விழித்து நெசவு செய்யும் நெசவாளர்கள், நள்ளிரவில் டீக்கடைகளுக்கு சென்று வருவதும் வழக்கம்.

அம்மையார்குப்பம் கிராமம் என்ற அடையாளத்தில் இருந்து, தொழில் நகரமாக வளர்ந்து வருகிறது. கிராமத்தின் பரப்பளவும், மக்களின் அடர்த்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அம்மையார்குப்பத்திற்கு, 4 கி.மீ., துாரத்தில் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட எல்லை அமைந்துள்ளது. இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து போதை பொருட்கள் எளிதாக கடத்தி வரப்படுவதாகவும் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள நாகாலம்மன் கோவில் குளக்கரையில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், புறக்காவல் நிலையம் கைவிடப்பட்டது. இதனால், அம்மையார்குப்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

சமீபத்தில், நெசவாளர் ஒருவர், போதை நபரால் அடித்து கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இரவு நேரத்தில் போதை நபர்கள் வழிப்பறி மற்றும் தனியாக செல்வோரிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், இரவு நேரத்தில் நெசவு செய்யவே நெசவாளர்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திற்கு செல்லும் குறுக்கு வழியின் நுழைவாயிலாக விளங்கும் அம்மையார்குப்பத்தில், மீண்டும் புறக்காவல் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'சிசிடிவி' அமைக்க முயற்சி

பகுதிவாசிகளின் பங்களிப்புடன் அம்மையார்குப்பம் கிராமத்தில் 'சிசிடிவி' அமைக்க இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள் அமைத்து, கிராமத்தை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தை முழுமையாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கனவே, பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையில் 'சிசிடிவி' கேமரா நிறுவப்பட்டு, ஊராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us