Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பூண்டி, புழல் ஏரிகளில் உபரி நீர் திறப்பு: வெள்ள பெருக்கை தவிர்க்க நடவடிக்கை

பூண்டி, புழல் ஏரிகளில் உபரி நீர் திறப்பு: வெள்ள பெருக்கை தவிர்க்க நடவடிக்கை

பூண்டி, புழல் ஏரிகளில் உபரி நீர் திறப்பு: வெள்ள பெருக்கை தவிர்க்க நடவடிக்கை

பூண்டி, புழல் ஏரிகளில் உபரி நீர் திறப்பு: வெள்ள பெருக்கை தவிர்க்க நடவடிக்கை

ADDED : அக் 16, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கை தவிர்க்கும் வகையில், நிரம்பிய நிலையில் உள்ள பூண்டி, புழல் ஏரிகள் திறக்கப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்க உள்ள நிலையில், வெள்ளப்பெருக்கால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மாவட்டம் முழுதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்தேக்கத்திற்கு, நீர்வரத்து அதிகமாக உள்ளது. மொத்த கொள்ளளவான, 3.21 டி.எம்.சி.,யில், தற்போது 3.04 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது.

வினாடிக்கு 2,280 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. சென்னை நகர குடிநீர் தேவைக்காக, புழல் ஏரிக்கு, வினாடிக்கு 787 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்த்தேக்கத்தின் வெள்ள நீர் வழிகாட்டுதல்படி, நீர்தேக்கத்தில் 33 அடி வரை தண்ணீரை சேமிக்கலாம். தற்போது, 1.30 கன அடி அதிகளவில் உள்ளது. இதையடுத்து, நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நேற்று இரண்டு கதவணை வழியாக, 700 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர், தாமரைப்பாக்கம் தடுப்பணையில் சேகரிக்கப்பட்டு, சுற்றுப்பகுதியில் உள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர ஆதாரமாக இருக்கும்.

மேலும், புழல் ஏரியில் 3.30 டி.எம்.சி., கொள்ளளவில், தற்போது 3.00 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 325 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று மதியம் 200 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, கொசஸ்தலை ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வடகிழக்கு பருவமழையின் போது, ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, 64 குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டு நிரம்பி, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ள புதுமாவிலங்கை - பிஞ்சிவாக்கம் இடையே கூவம் ஆற்றில், கடந்த 2020ம் ஆண்டு 7.50 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தடுப்பணையில் நீர் நிரம்பி வழிந்தோடுகிறது.

இதனால், கடம்பத்துார் பகுதிகளில், கூவம் ஆற்றை நம்பி சத்தரை, அகரம், புதுமாவிலங்கை, அதிகத்துார், பிஞ்சிவாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, 800 ஏக்கரில் பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிச்சாட்டூர் அணை ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தின் கொள் ளளவு, 1.85 டி.எம்.சி., நீர்மட்டம், 31 அடி. சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீர்வரத்து ஏற்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திர மாநில நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us