/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஏரியில் விடப்படும் தொழிற்சாலை கழிவுநீரால் துர்நாற்றம்!: இரு துறைகளின் அலட்சியத்தால் மக்கள் தவிப்புஏரியில் விடப்படும் தொழிற்சாலை கழிவுநீரால் துர்நாற்றம்!: இரு துறைகளின் அலட்சியத்தால் மக்கள் தவிப்பு
ஏரியில் விடப்படும் தொழிற்சாலை கழிவுநீரால் துர்நாற்றம்!: இரு துறைகளின் அலட்சியத்தால் மக்கள் தவிப்பு
ஏரியில் விடப்படும் தொழிற்சாலை கழிவுநீரால் துர்நாற்றம்!: இரு துறைகளின் அலட்சியத்தால் மக்கள் தவிப்பு
ஏரியில் விடப்படும் தொழிற்சாலை கழிவுநீரால் துர்நாற்றம்!: இரு துறைகளின் அலட்சியத்தால் மக்கள் தவிப்பு
ADDED : ஜூலை 15, 2024 11:12 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாக தொழிற்சாலைகளின் கழிவுநீர், டேங்கர் லாரி கழிவுநீர், குடியிருப்பு பகுதிகளின் கழிவுநீர் தாமரை ஏரியில் கலப்பதால், ஏரி நீர் மாசு அடைந்து முழுதும் கழிவுநீர் தேங்கி, ஆகாய தாமரை படர்ந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமான, 48 ஏக்கர் பரப்பளவு உடைய தாமரை ஏரி, நீர்வளத்துறையினர் பராமரிப்பில் உள்ளது.
கும்மிடிப்பூண்டி நகரின் நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் பாதுகாக்கும், தாமரை ஏரி, தற்போது, அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரின் தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன், 2017ம் ஆண்டு, இளைஞர் அமைப்பு ஒன்று, கருவேல மரங்கள், முட்புதர்கள், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், ஆகாய தாமரைகளை அகற்றினர். அப்போது ஏரி புத்துயிர் பெற்றது. அதன்பின் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில், ஏரிக்கரை ஓரம் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.
அப்போது, ஏரி கரையின் மீது, மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் விதமாக, நடைபாதை அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் ஏரியை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. கட்டுபாடுகள் ஏதும் இல்லாத நிலையில், ஏரியை சுற்றியுள்ள, திருவள்ளூர் நகர், அருண் நகர் குடியிருப்புகள், ஜி.என்.டி., சாலையோர உணவகங்கள், விடுதிகளின் கழிவுநீர் ஏரியில் திறந்து விடப்படுகிறது.
மேற்கண்ட அத்துமீறல்கள் 30 சதவிகிதம் என்றால், எஞ்சிய 70 சதவிகித அத்துமீறல்கள் தேசிய நெடுஞ்சாலையோர மழைநீர் கால்வாய் வாயிலாக நடக்கிறது.
கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோர மழைநீர் கால்வாய், தாமரை ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த மழைநீர் கால்வாயில், சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், டேங்கர் லாரிகளின் கழிவுநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் கழிவுநீர் கலக்கிறது. அது நேராக, தாமரை ஏரியை இணைக்கும் கால்வாய்களில் கலக்கிறது.
தாமரை ஏரியில் கழிவுகளும், கழிவுநீரும் சூழ்ந்ததால், ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளன. தாமரை ஏரி மாசு அடைந்ததை உறுதி செய்யும் விதமாக, 2023ம் ஆண்டு மே மாத துவக்கத்தில் ஏரி மீன்கள் செத்து மிதந்தன. அதே ஆண்டு பெய்த கனமழையின் போது, ஏரியில் தேங்கியிருந்த கழிவுநீர் நிரம்பி வழிந்து, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலை மற்றும் ரெட்டம்பேடு சாலையைசூழ்ந்தது.
நான்கு நாட்களாக சாலைகளில் ஓடிய கழிவுநீரால், பகுதிவாசிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.
தாமரை ஏரியில் கலக்கும் கழிவுநீர், அதன் கீழ் அடுத்தடுத்து உள்ள ஏரிகளை சென்றடைவதால் அந்த ஏரிகளும் மாசு அடைந்து வருகின்றன. இத்தனை அவலங்களும் கடந்த ஆண்டு அரங்கேறிய நிலையில், இன்று வரை தீர்வு காணப்படவில்லை. தற்போது ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.
நீர் வளங்களை பாதுகாக்க வேண்டிய நீர் வளத்துறையினரும் சரி, தொழிற்சாலை கழிவுநீர் கலப்பை தடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் சரி, தாமரை ஏரியை மீட்க நடவடிக்கை எடுக்காதது துரதிஷ்டவசமானது. அடுத்து வர இருக்கும் தொடர் மழைக்கு முன், தாமரை ஏரியை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.