Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கால்நடை துறையில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு: 10 ஆண்டாக நியமனம் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

கால்நடை துறையில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு: 10 ஆண்டாக நியமனம் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

கால்நடை துறையில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு: 10 ஆண்டாக நியமனம் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

கால்நடை துறையில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு: 10 ஆண்டாக நியமனம் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

ADDED : மார் 20, 2025 09:26 PM


Google News
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் அம்பத்துார் ஆகிய இடங்களில் கால்நடை துறையின் உதவி இயக்குனர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த, 2019ம் ஆண்டு, 20 வது கால்நடை கணக்கெடுப்பின் படி, திருவள்ளூர் மாவட்டத்தில், 2.74 லட்சம் கறவை பசுகள் மற்றும் மாடுகள், 56 ஆயிரம் எருமைகள் என மொத்தம், 3.30 லட்சம் மாடுகள் உள்ளன. மேலும், 74,780 செம்மறி ஆடுகள், 1,87,984 வெள்ளாடுகள் என மொத்தம், 2,62, 780 ஆடுகள், 3.32 லட்சம் கோழிகள், 61,770 செல்லப் பிராணிகள் உள்ளன.

இவைகளுக்கு, ஐந்து கால்நடை மருத்துவமனை, 88 கால்நடை மருந்தகம், 25 கிளை நிலையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு மொபைல் ஆம்புலன்ஸ் வீதம், 5 ஆம்புலன்ஸ், ஒரு நடமாடும் கால்நடை மருந்தகம், போளிவாக்கத்தில் ஒரு நோய் புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாவட்டத்தில், தற்போது மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக இல்லை. அதே நேரத்தில், 56 கால்நடை ஆய்வாளர்களில், 26 பணியிடம், 120 கால்நடை உதவியாளர்களில், 56 பணியிடம், 7 அலுவலக உதவியாளர், 7 இரவு காவலர்கள் என மொத்தம், 96 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்கள் கடந்த,10 ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்பாமல் உள்ளதால் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகிறது.

இதனால் விவசாயிகள் வளர்த்து பராமரிக்கும் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் கால்நடைகள் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த, 2012 ஆண்டிற்கு பின் கால்நடை துறையில் ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் இதுவரை நியமனம் செய்யவில்லை. மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு, கடந்த, 2015ம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு, மூன்று முறை 'இன்டர்வியூ' என மாவட்ட கலெக்டரால் தேதி அறிவிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது.

மேலும், நான்கு உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள் ஆகிய பணியிடங்களும் பல ஆண்டுகளாக நியமனம் இல்லை.

இது குறித்து மாவட்ட கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,' மாவட்டத்தில் காலியாக உள்ள ஆய்வாளர், உதவியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் பணியிடம் குறித்து, உயரதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைக்கிறோம். காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அரசின் கொள்கை முடிவாகும்' என்றார்.

நீதிமன்ற வழக்குகால் தள்ளிபோகும் நியமனம்


கால்நடை துறையில் காலியாக உதவியாளர் பணிக்கு, கடந்த, 2015ம் ஆண்டு விண்ணப்பம் பெற்று நேர்காணல் நடந்தது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள, 65 உதவியாளர்களுக்கு, 6,150 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களை நேர்காணலுக்கு கடிதம் அனுப்பிய நிலையில் நீதிமன்ற வழக்கால், தள்ளி வைக்கப்பட்டது.
அதே போல், ஆய்வாளர் பணியிடத்திற்கு, கடந்த, 2018 ம் ஆண்டு போட்டி தேர்வின் மூலம் தேர்வு செய்ய விண்ணப்பம் வழங்கப்பட்டது. தேர்வுக்கு ஹால்டிக்கெட் வந்தும் நீதிமன்ற வழக்கால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள், தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் கடிதம் அனுப்பிய நிலையில், நீதிமன்ற வழக்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.***







      Our Apps Available On




      Dinamalar

      Follow us