Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் டன் கணக்கில் கொட்டிய விவசாயிகள் விலை போகாத மாம்பழம்! திருத்தணியில் பழச்சாறு ஆலை துவக்க கோரிக்கை

சாலையில் டன் கணக்கில் கொட்டிய விவசாயிகள் விலை போகாத மாம்பழம்! திருத்தணியில் பழச்சாறு ஆலை துவக்க கோரிக்கை

சாலையில் டன் கணக்கில் கொட்டிய விவசாயிகள் விலை போகாத மாம்பழம்! திருத்தணியில் பழச்சாறு ஆலை துவக்க கோரிக்கை

சாலையில் டன் கணக்கில் கொட்டிய விவசாயிகள் விலை போகாத மாம்பழம்! திருத்தணியில் பழச்சாறு ஆலை துவக்க கோரிக்கை

ADDED : ஜூன் 23, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
பள்ளிப்பட்டு :திருவள்ளூர் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள், ஆந்திர மாநிலம் சித்துார், புத்துார் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பழச்சாறு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது, போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொதட்டூர்பேட்டையில் நேற்று, மாம்பழங்களை சாலையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில், மலை சார்ந்த நிலப்பரப்பில் ஏராளமான மாந்தோப்புகள் உள்ளன. இப்பகுதியில், 600 விவசாயிகள் 11,000 ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்புகளை பராமரித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை மாதம் வரையிலான மாம்பழ சீசனில், 2 லட்சம் டன் அளவிற்கு மாம்பழங்கள் விளைகின்றன. இதில், உள்ளூரில் 20 - 35 டன் அளவிலான மாம்பழங்கள் மட்டுமே விற்பனையாகின்றன.

இதனால், ஆந்திர மாநிலம், புத்துார், சித்துார் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மாம்பழச்சாறு ஆலைகளுக்கு, மாம்பழங்களை கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் இருந்து புத்துார், சித்துாருக்கு டிராக்டர்களில் மாம்பழங்களை கொண்டு செல்கின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு வரை, தமிழக மாம்பழங்களுக்கு, ஆந்திராவில் அதிகபட்ச விலை கொடுத்து கொள்முதல் நடந்து வந்தது. 1 கிலோ மாம்பழம் 30 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், ஆண்டு முழுதும் மாந்தோப்புகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைத்தது.

தற்போது, 1 கிலோ மாம்பழங்கள் 4 ரூபாய் மட்டுமே விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காப்பீடு


பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நலன் கருதி, திருத்தணியில் மாம்பழச்சாறு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

மா விவசாயிகளுக்கு காப்பீடு, மானிய விலையில் உரம், குறைந்த வாடகையில் 'டிரோன்' வாயிலாக உரம் தெளிக்க கருவிகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதட்டூர்பேட்டையில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு டிராக்டரில் மாம்பழங்களை கொண்டு வந்த விவசாயிகள், சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்திலேயே மாங்கனிகளை அரசு கொள்முதல் செய்ய ஏதுவாக, திருத்தணியில் பழச்சாறு ஆலை துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

திருத்தணியில் ஆலை துவக்க வேண்டும்

ஆந்திர மாநில தனியார் பழச்சாறு ஆலைகளை நம்பியே, திருவள்ளூர் மாவட்ட மாம்பழ விவசாயிகள் உள்ளனர். திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டையில் மாம்பழங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் தர்மபுரி, போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தனியார் மாம்பழச்சாறு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, திருத்தணியில் மாம்பழச்சாறு ஆலைகளை துவக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.- -எஸ்.ஜெயச்சந்திரன், மாநில விவசாயிகள் சங்க உறுப்பினர்.



வேளாண் வணிக துறை முனைப்பு

இதுகுறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை அதிகாரி கூறியதாவது:மாம்பழச்சாறு தயாரிக்கும் ஆலை நிறுவனங்களுக்கும், மாங்கனி விவசாயிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக கணிசமான விலை கொடுத்து, மாம்பழங்களை கொள்முதல் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழ விளைச்சல் குறித்து புள்ளிவிபரம் சேகரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், மாம்பழ விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us