
சேதமடைந்த மின்கம்பம்
அரக்கோணம் - -திருவள்ளூர் நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது.
சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் நிலையிலும், விரிசல் அடைந்தும் உள்ளது. மின்கம்பம் எந்நேரமும் விழும் ஆபத்து உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மின் துறை அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
_வி. இதயகுமார், திருவாலங்காடு.
மின்கம்பியை சூழ்ந்த
கொடிகள் அகற்றப்படுமா?
திருவாலங்காடு ஊராட்சியில் தக்கோலம்-- கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலையில் நட்டேரி எதிரே அமைந்துள்ள மின்கம்பத்தை சுற்றி கொடிகள் ஏறி மின்கம்பியை ஆக்கிரமித்து உள்ளன.
இந்த கொடிகள், மின்கம்பி மீது படர்ந்து உள்ளதால், மழைக்காலத்தில் சிறிய அளவு காற்று வீசினால் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் சில நேரங்களில் அதிக அல்லது குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு, வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதாகும் வாய்ப்பும் உள்ளதால், மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் மீது படர்ந்துள்ள கொடிகளை அகற்ற மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அ. மணவாளன், தக்கோலம்.