/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பால பணி...இழுபறி!: 13 ஆண்டுகளாக இழுத்தடிப்பதால் வேதனைசெவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பால பணி...இழுபறி!: 13 ஆண்டுகளாக இழுத்தடிப்பதால் வேதனை
செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பால பணி...இழுபறி!: 13 ஆண்டுகளாக இழுத்தடிப்பதால் வேதனை
செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பால பணி...இழுபறி!: 13 ஆண்டுகளாக இழுத்தடிப்பதால் வேதனை
செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பால பணி...இழுபறி!: 13 ஆண்டுகளாக இழுத்தடிப்பதால் வேதனை
ADDED : ஜூன் 12, 2024 02:25 AM

செவ்வாப்பேட்டை: திருவள்ளூர் அருகே 13 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட செவ்வாப்பேட்டை ரோடு ரயில்வே மேம்பால பணி, இன்னும் முடிவுக்கு வராததால் பகுதிவாசிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேம்பால பணிகள் எப்போது நிறைவடைந்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு வரும் என, பகுதிவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை- -- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் கடவுப்பாதை 15ல் செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையம் அமைந்துள்ளது.
இந்த ரயில் நிலையம் அருகே இருந்த கடவுப் பாதையில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருவதால் அடிக்கடி மூடப்பட்டு வந்தது.
இதன் காரணமாக, செவ்வாப்பேட்டை, திருவூர், தொழுவூர், அரண்வாயில் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட பலர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தெற்கு ரயில்வேயும், மாநில நெடுஞ்சாலைதுறையும் இணைந்து, ரயில்வே மேம்பாலம் அமைக்க 2011-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு அந்த ஆண்டே ரயில்வே கடவுப் பாதை அகற்றப்பட்டு, ரயில்வேக்கு சொந்தமான பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை துவங்கி இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைத்துறை, செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் 2015-ம் ஆண்டு 20 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி துவக்கியது.
அப்பணியில், கடவுப் பாதையின் ஒருபுறமான திருவூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்தது.
அதே நேரத்தில், கடவுப் பாதையின் மற்றொரு புறமான செவ்வாப்பேட்டை ரோடு பகுதியில் மேம்பாலப் பணிக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.அந்நிலங்களின் உரிமையாளர்கள், கையகப்படுத்தப்படும் தங்கள் நிலத்துக்கான இழப்பீடுத் தொகை குறைவாக உள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதனால், அப்பகுதியில் சுமார் 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில், மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், மேம்பால பணிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செயயப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை இன்னும் பணிகளை துவங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இவ்வாறு 13 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட செவ்வாப்பேட்டை ரோடு ரயில்வே மேம்பால பணி எப்போது துவங்கி போக்குவரத்து பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்வி வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகளிடையே எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையத்தில் புதிய மேம்பால பணிகளை விரைவில் துவங்க வேண்டுமென 15க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் சா. அருணன் கூறியதாவது:
திருவூர் மற்றும் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் அவசர மருத்துவ தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட வரமுடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறோம்.
மேலும் செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையம் அருகே உள்ள, திருவூர் ஏரி நீர், தொழுவூர் ஏரிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக 2 கி.மீ., துரத்துக்கு மேல் சுற்றி பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. விரைவில் மேம்பால பணிகளை முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.