Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஊத்துக்கோட்டையில் கொன்று புதைத்த இளைஞர்களின் உடல்கள் தோண்டி எடுப்பு

ஊத்துக்கோட்டையில் கொன்று புதைத்த இளைஞர்களின் உடல்கள் தோண்டி எடுப்பு

ஊத்துக்கோட்டையில் கொன்று புதைத்த இளைஞர்களின் உடல்கள் தோண்டி எடுப்பு

ஊத்துக்கோட்டையில் கொன்று புதைத்த இளைஞர்களின் உடல்கள் தோண்டி எடுப்பு

ADDED : ஜூன் 27, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில், கொன்று புதைக்கப்பட்ட இளைஞர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் கச்சூர் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன், 19, ஆகாஷ், 18. கடந்த 17ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை. இது குறித்து பென்னலுார்பேட்டை போலீசார் விசாரித்தனர்.

இந்த நிலையில், ஊத்துக்கோட்டை ரோஜா தெருவைச் சேர்ந்த நலம் பாண்டியன், 23, என்பவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு பேரையும் கொன்று புதைத்ததாக கூறி, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தார்.

அவர் அளித்த தகவலின்படி அவரது கூட்டாளிகளான மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், உடல்கள் தோண்டி எடுக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால், இருவரது உறவினர்களும், ஊத்துக்கோட்டை ரெட்டித் தெருவில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும் இறந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர்.

இந்த நிலையில், நேற்று மதியம் ஊத்துக்கோட்டை தாசில்தார் ராஜேஷ், ஏ.டி.எஸ்.பி., அரிகுமார் முன்னிலையில், இருவரது உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டன.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அருண் கவுதம், ஆஷா ஆகியோர், சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை செய்த பின், உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கொலை சம்பவம் குறித்து, நலம்பாண்டியன் அளித்த வாக்குமூலம்:

கடந்த நவம்பர் மாதம், ஊத்துக்கோட்டை அருகே கஞ்சா விற்பது தொடர்பாக கல்லுாரி மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், நான் சாட்சி கூறியதாகவும், இதற்கு பழிவாங்க போவதாகவும் ஆகாஷ் அடிக்கடி கூறினான்.

கடந்த 18ம் தேதி காலை, ஜானகிராமன், ஆகாஷ் ஆகியோர், என்னை மது அருந்த அழைத்தனர். சந்தேகமடைந்த நான், நண்பர்களான மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவனை உடன் அழைத்துக் கொண்டு, நீர்வள ஆதாரத்துறை அலுவலக வளாகத்திற்கு சென்றேன்.

ஐந்து பேரும் மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளால் இருவரையும் சரமாரியாக வெட்டினோம்.

உடல்களை அங்கேயே விட்டுச் சென்ற நிலையில், வீட்டிற்கு சென்று கடப்பாரை, மண்வெட்டி எடுத்து வந்து, அங்கேயே பள்ளம் தோண்டி ஒரே குழியில் புதைத்தோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அழித்துள்ளார்.

கொலையாளிகள் மூவரையும் போலீசார் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வாலிபர்கள் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us