Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குட்கா, கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

குட்கா, கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

குட்கா, கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

குட்கா, கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

ADDED : ஜூன் 27, 2024 01:33 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் ஆரம்பாக்கம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து மூட்டைகளுடன், 'டி.வி.எஸ்., ஜூபீட்டர்' ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த மூட்டைகளில், 30 கிலோ எடை கொண்ட, 6,870 குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பொன்னேரியைச் சேர்ந்த கதிர்வேல், 45, என்பவரை கைது செய்தனர்.

அதேபோல், எளாவூர் சோதனைச்சாவடியில் நேற்று நடத்திய சோதனையில், ஆந்திர மாநில அரசு பேருந்தில், 5 கிலோ குட்கா கடத்திய தண்டையார்பேட்டையை சேர்ந்த உத்தமன், 75, என்பவரை கைது செய்தனர்.

• ஆந்திர மாநில அரசு பேருந்தில், பயணியரின் உடமைகளை சோதனையிட்டனர். அதில் பயணித்த, ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவர் வெங்கடேஷ்வர ரெட்டி, 20, என்பவரிடம் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவர், சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.டெக்., இறுதி ஆண்டு படித்து வருகிறார். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

திருத்தணி: சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை, திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மூவரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்த 22 கிலோ கஞ்சா மற்றம் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில், ஆந்திர மாநிலம் புத்துார் பகுதியைச் சேர்ந்த விஜய், 47, வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரவீன், 24, ராணிப்பேட்டையைச் சேர்ந்த வெங்கட், 23, என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

- நமது நிருபர் குழு -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us