ADDED : ஜூன் 24, 2024 05:07 AM
மீஞ்சூர்: பொன்னேரி அடுத்த சின்னகாவணம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், 26. ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பொன்னேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி.
இவரது மனைவிக்கும், மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்த விஷ்ணு, 24, என்பவருக்கும் இடையே கள்ளதொடர்பு இருந்தது. விஷ்ணு லட்சுமணனின் நண்பர் ஆவார்.
விஷ்ணு மீதும், மீஞ்சூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளியாவார்.
கள்ளதொடர்பு விவகாரம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று விஷ்ணு, லட்சுமணன் ஆகியோர் ஒன்றாக மது அருந்தினர்.
இரவு, 7:30 மணிளவில் போதையில் இருந்த லட்சுமணனை தோட்டக்காடு கிராமத்திற்கு அழைத்து சென்ற விஷ்ணு, நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து கத்தியால் தலையில் குத்தி விட்டு தப்பினார். இதில் ரத்தகாயங்களுடன் லட்சுமணன் இறந்தார்.
தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, லட்சுமணனின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.