Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வரும் 21ல் விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம்

வரும் 21ல் விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம்

வரும் 21ல் விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம்

வரும் 21ல் விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம்

ADDED : ஜூலை 08, 2024 06:12 AM


Google News
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நடப்பு ஆண்டுக்கான வியாச பூஜையை வரும் 21ம் தேதி துவக்குகிறார் என, சங்கரமடம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் தெரிவித்திருப்பதாவது:

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நடப்பு ஆண்டுக்கான வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதத்தை வரும் 21ல் துவக்கி, செப்டம்பர் மாதம் 18ம் தேதி வரை, ஓரிக்கை, மஹா பெரியவர் மணிமண்டபத்தில் கடைப்பிடிக்க இருக்கிறார்.

சாதுர்மாஸ்ய விரதம் என்பது ஆடி மாத பவுர்ணமி முதல், கார்த்திகை மாத பவுர்ணமி வரை என, தொடர்ந்து நான்கு மாதங்கள் கடைப்பிடிக்கக் கூடிய சக்தி மிக்க விரதங்களில் ஒன்றாகும்.

துறவியர் வேதவியாசரை வழிபட்டு இந்த விரதத்தை துவங்குவார். இவ்விரத நாட்களில் துறவியர்களை வழிபடுவது மிகவும் சிறப்பாகவும் கருதப்படுகிறது. காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இவ்விரதத்தை காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள காஞ்சி மகா சுவாமிகள் மணிமண்டப வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பூஜை மண்டபத்தில் கடைப்பிடிக்க உள்ளார்.

இவ்விரத நாட்களின் போது திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீசுவரருக்கு சிறப்பு பூஜை, உலக நன்மைக்காக சதுர்வேத பாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை கச்சேரி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

வரும் 27ம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 90வது ஜெயந்தி மஹோற்சவமும் ஓரிக்கை மஹா பெரியவர் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. பக்தர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்று காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசி பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us