Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தேவனேரி இணைப்பு சாலை சீரமைப்பில் அலட்சியம் சகதியாக மாறியதால் வாகன ஓட்டிகள் தவிப்பு

தேவனேரி இணைப்பு சாலை சீரமைப்பில் அலட்சியம் சகதியாக மாறியதால் வாகன ஓட்டிகள் தவிப்பு

தேவனேரி இணைப்பு சாலை சீரமைப்பில் அலட்சியம் சகதியாக மாறியதால் வாகன ஓட்டிகள் தவிப்பு

தேவனேரி இணைப்பு சாலை சீரமைப்பில் அலட்சியம் சகதியாக மாறியதால் வாகன ஓட்டிகள் தவிப்பு

ADDED : ஜூன் 29, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
சோழவரம்:சோழவரம் அடுத்த செம்புலிவரம் அருகே சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து துவங்கும் இணைப்பு சாலை, ஆத்துார் பாலத்தின் அருகே மீண்டும் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது.

இதற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள, தேவனேரியில், 300மீ, தொலைவிற்கு இணைப்பு சாலை சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

சிறுமழை பெய்தாலும் அந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. தேங்கும் மழைநீர் அகற்றப்படுவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், இணைப்பு சாலையை சீரமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன. அங்கிருந்த தார், ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டன.

அதன்பின் எந்தவொரு பணியும் அங்கு மேற்கொள்ளாமல், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் இணைப்பு சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு உள்ளது.

தற்போது மழைநீர் தேங்கி, சாலை சகதியாக மாறி உள்ளது. தேவனேரி, எஸ்.பி.கே நகர் பகுதிவாசிகள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு சோழவரம் பஜார் பகுதிக்கு சென்று வருவதற்காக, இந்த சாலை மற்றும் சுரங்கபாதையை பயன்படுத்தி வந்தனர்.

தற்போது சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் அவர்கள், ஆத்துார், காரனோடை வழியாக சோழவரம் பகுதிக்கு சென்று வருகின்றனர்.சாலை சேதம் அடைந்து போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு இருப்பது தெரியாமல் கார், வேன், லாரி உள்ளிட்டவை அருகில் வந்து கவனித்து, பயணிக்க வழியில்லை என தெரிந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றன. இதனால் நேர விரயம், எரிபொருள் வீணாகிறது.

இணைப்பு சாலை பராமரிப்பில் அலட்சியம் காட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை, குறைந்தபட்சம், சாலை பழுது குறித்து தகவல் பலகைகூட வைக்கவில்லை என, வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கிடப்பில் போடப்பட்ட இணைப்பு சாலை சீரமைப்பு பணிகளை உடனடியாக துவங்க வேண்டும், பணிகள் நடைபெறுவது குறித்து உரிய இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us