/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 15ம் தேதிக்குள் ரேஷன் பொருள் வழங்க கலெக்டர் உத்தரவு 15ம் தேதிக்குள் ரேஷன் பொருள் வழங்க கலெக்டர் உத்தரவு
15ம் தேதிக்குள் ரேஷன் பொருள் வழங்க கலெக்டர் உத்தரவு
15ம் தேதிக்குள் ரேஷன் பொருள் வழங்க கலெக்டர் உத்தரவு
15ம் தேதிக்குள் ரேஷன் பொருள் வழங்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 14, 2024 12:52 AM
திருவள்ளூர்:ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதம், 15ம் தேதிக்குள் அனைத்து பொருட்களும் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொது வினியோக திட்ட ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
கலெக்டர் பேசியதாவது:
அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் 15ம் தேதிக்குள் நுகர்வு செய்யப்பட வேண்டும். நுகர்வு குறைவாக உள்ள ரேஷன் கடைகளை ஆய்வு செய்து நுகர்வு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் தரமாகவும் சரியான நேரத்தில் கடைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் எண் குடும்ப அட்டையில் சேர்க்கப்படாமல் உள்ள குழந்தைகளின் ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உணவுப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை கைப்பற்றி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
ரேஷன் கடைகள் தொடர்பாக வரப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கவுசல்யா, துணை பதிவாளர் - பொது வினியோகத் திட்டம் ரவி, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.