Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'இண்டியன் ஆயில்' பந்துவீச்சில் சென்னை பல்கலை 'சரண்டர்'

'இண்டியன் ஆயில்' பந்துவீச்சில் சென்னை பல்கலை 'சரண்டர்'

'இண்டியன் ஆயில்' பந்துவீச்சில் சென்னை பல்கலை 'சரண்டர்'

'இண்டியன் ஆயில்' பந்துவீச்சில் சென்னை பல்கலை 'சரண்டர்'

ADDED : ஜூலை 22, 2024 06:05 AM


Google News
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் வி.பி.ராகவன் கோப்பைக்கான கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி லீக் ஆட்டத்தில், இண்டியன் ஆயில் பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், சென்னை பல்கலை அணி வீரர்கள் திணறினர்.

டி.என்.சி.ஏ., எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், வி.பி.ராகவன் கோப்பைக்கான, லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாநிலம் முழுதும் நடந்து வருகிறது.

இதில், தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள், கிரிக்கெட் குழுக்கள், நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

பங்கேற்றுள்ள அணிகள் மண்டலம் மற்றும் டிவிஷன் வாரியாக பிரிக்கப்பட்டு, மாநிலம் முழுதும் பல்வேறு மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.

இதில், 50 ஓவர் அடிப்படையிலான இப்போட்டியில், டிவிஷன் - 5, 'பி' மண்டலத்தில் இடம்பெற்றுள்ள 'இண்டியன் ஆயில்' மனமகிழ் மற்றும் விளையாட்டு குழு அணியும், சென்னை பல்கலை குழு அணியும் பலப்பரீட்சை நடத்தின.

சென்னை, சேத்துப்பட்டில் உள்ள பல்கலை விளையாட்டு மைதானத்தில், நேற்று காலை நடந்த இப்போட்டியில், முதலில் களமிறங்கிய சென்னை பல்கலை அணி வீரர்கள் ஆடுகளம் வருவதும், பெவிலியன் திரும்புவதுமாக இருக்க, அந்த அணி 23.4 ஓவர்களில், 49 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின், எளிய இலக்குடன் களமிறங்கிய இண்டியன் ஆயில் அணி, 13 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து, 50 ரன்கள் எடுத்தது. இதனால், 9 விக்கெட் வித்தியாசத்தில், அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us