Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மழைநீர் வீணாவதை தடுக்க பனப்பாக்கம் விவசாயிகள் கோரிக்கை

மழைநீர் வீணாவதை தடுக்க பனப்பாக்கம் விவசாயிகள் கோரிக்கை

மழைநீர் வீணாவதை தடுக்க பனப்பாக்கம் விவசாயிகள் கோரிக்கை

மழைநீர் வீணாவதை தடுக்க பனப்பாக்கம் விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஜூன் 08, 2024 11:03 PM


Google News
பொன்னேரி: பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக மழைபொழிவு இருந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் வாய்ப்புள்ள கிராமங்களில் சொர்ணவாரி பருவத்திற்கு விவசாய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாவதை கண்டு கவலை அடைந்து உள்ளனர். இங்குள்ள, 250 ஏக்கர் பரப்பு பாசன ஏரியை நம்பி, 300 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பனப்பாக்கம் ஏரியின் அருகில், 300 ஏக்கர் பரப்பில் பெரியகரும்பூர் ஏரியும் அமைந்து உள்ளது. இந்த இரு ஏரிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில், 100 ஏக்கர் மேய்க்கால் நிலம் உள்ளது.

இந்த மேய்க்கால் நிலப்பகுதியானது தாழ்வாக இருப்பதால், மழைக்காலங்களில் இதில் மழைநீரை தேக்கி வைத்து, பனப்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல, ஏரிகளுக்கு இடையே கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

மேற்கண்ட தடுப்பு சுவர் சேதம் அடைந்து சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. இதனால், மழைக்காலங்களில் மேய்க்கால் பகுதியில் தேங்கும் தண்ணீர் உடைப்பு வழியாக வெளியேறி வீணாகிறது.

தற்போது அவ்வப்போது பெய்துவரும் மழையால் மேய்க்கால் பகுதிக்கு வரும் தண்ணீர் தடுப்பு சுவர் உடைப்பு வழியாக வெளியேறி பழவேற்காடு கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.

மழைநீரை மட்டும் நம்பி விவசாயம் செய்துவரும் நிலையில் கிடைக்கும் தண்ணீரை ஏரிக்கு கொண்டு சென்று சேமிக்க முடியாத நிலை இருப்பதால் விவசாயிகள் பொதுப்பணித்துறை மீது அதிருப்தியில் உள்ளனர்.

மழைநீர் வீணாவதை தடுக்க பொதுப்பணித்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us