ADDED : ஜூன் 20, 2024 12:52 AM
பூந்தமல்லி:வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, நசரத்பேட்டை சுங்கச்சாவடி அருகே, பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர்.
அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை மடக்கி, சோதனை செய்ய முயன்றனர். அப்போது, காரில் இருந்த மூவரும் இறங்கி தப்பிச் சென்றனர். பின், காரை சோதனை செய்த போது, அதில் சிறு சிறு பைகளில், கஞ்சா இருந்துள்ளது.
கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பூந்தமல்லி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு, 100 கிலோ என்பதும், ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வந்ததும் தெரிந்தது.
போலீசார் மூவரை தேடி வருகின்றனர்.