Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயர் யார்... * மீண்டும் போட்டா போட்டி

திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயர் யார்... * மீண்டும் போட்டா போட்டி

திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயர் யார்... * மீண்டும் போட்டா போட்டி

திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயர் யார்... * மீண்டும் போட்டா போட்டி

ADDED : ஆக 02, 2024 02:11 AM


Google News
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் தி.மு.க., மேயர் சரவணன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் புதிய மேயர் ஆக., 5ல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். புதிய மேயராக போட்டி நிலவுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 4 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தவிர தி.மு.க., கூட்டணி பெரும்பான்மையாக உள்ளது. தி.மு.க., கவுன்சிலர் சரவணன் கடந்த முறை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

மற்ற கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு பணிகளை முறையாக ஒதுக்கி தரவில்லை எனக்கூறி தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோரின் வீடுகளில் காத்திருந்து மேயர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

லோக்சபாத் தேர்தலுக்குப் பிறகு மேயர் சரவணன் நீக்கப்படுவார் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி அண்மையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆக., 5ல் புதிய மேயரை தேர்ந்தெடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அன்று காலை 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து போட்டி இருந்தால் தேர்தலை நடத்தி பிற்பகலில் முடிவை அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேயர் தேர்தலில் இரண்டு முறை ஒதுக்கீடு காரணமாக பட்டியல் இனத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி, ஜெயராணி மேயராக தேர்வு செய்யப்பட்டனர். பொது மேயர் என நடந்த தேர்தல்களில் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஏ.எல். சுப்பிரமணியன், விஜிலா சத்யானந்த், புவனேஸ்வரி, சரவணன் ஆகியோரே மேயர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த முறையும் தற்போது தி.மு.க., கவுன்சிலராக உள்ள கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன் ஆகியோரில் ஒருவர் மேயராகும் வாய்ப்பு உள்ளது. அதிலும் கிட்டுவிற்கு தி.மு.க., மற்றும் கவுன்சிலர்கள் வட்டாரங்களில் ஆதரவு உள்ளது.

துணை மேயர் கே.ஆர்.ராஜு மேயராகும் முயற்சிகள் மேற்கொண்டார். சென்னையில் சில தினங்கள் காத்திருந்தார். இருப்பினும் துணைமேயரை மேயராக தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் இல்லாததால் அவர் முயற்சிகளை கைவிட்டு விட்டார்.

வேறு சில கவுன்சிலர்களும் மேயர் பொறுப்பிற்கு வர பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சமாளிப்பாரா கிட்டு.

தி.மு.க.,வின் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் ஏற்கனவே கவுன்சிலராக இருந்துள்ளதால் மாமன்ற கூட்ட அவையை சமாளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கவுன்சிலர்களின் எதிர்பார்ப்பை மாதந்தோறும் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

இருப்பினும் கிட்டுவிற்கு பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மை கவுன்சிலர்களின் விருப்பத்திற்கு எதிராக ஜாதி ரீதியாக வேறு புதிய நபரை மேயராக தலைமை அறிவித்தால் சரவணனுக்கு நிகழ்ந்தது போல மீண்டும் ஒவ்வொரு கூட்டத்திலும் கவுன்சிலர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும்.

மீதமுள்ள இரண்டு ஆண்டுகளையும் பிரச்னை இல்லாமல் கடக்க தி.மு.க., தலைமை விரும்புவதால் மேயர் பொறுப்பு சைவ வேளாளர் சமூகத்திற்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us