Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ 18ம் கால்வாயில் இந்த ஆண்டாவது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா: துார் வாராததால் பல இடங்களில் கரை உடையும் அபாயம்

18ம் கால்வாயில் இந்த ஆண்டாவது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா: துார் வாராததால் பல இடங்களில் கரை உடையும் அபாயம்

18ம் கால்வாயில் இந்த ஆண்டாவது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா: துார் வாராததால் பல இடங்களில் கரை உடையும் அபாயம்

18ம் கால்வாயில் இந்த ஆண்டாவது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா: துார் வாராததால் பல இடங்களில் கரை உடையும் அபாயம்

ADDED : ஜூன் 18, 2025 04:42 AM


Google News
Latest Tamil News
கூடலுார்: 18ம் கால்வாய் கரையில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் திறப்பதற்கு முன் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

லோயர்கேம்பில் இருந்து போடி வரையுள்ள 18ம் கால்வாயை நம்பி உத்தமபாளையம், போடி தாலுகாக்களில் 4615 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் உள்ளன. இது தவிர 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஒவ்வொரு ஆண்டும் அக்., தண்ணீர் திறக்கப்படும். 2021ல் அணை நீர்மட்டம் திருப்திகரமாக இருந்ததால் ஆக. 17ல் தண்ணீர் திறக்கப்பட்டது. 2022ல் செப். 14ல் திறக்கப்பட்டது. 2023ல் பெரியாறு அணையில் நீர் இருப்பு அதிகமாக இருந்த போதிலும் இரண்டு மாதம் தாமதமாக டிச., திறக்கப்பட்டது. 2024ல் டிசம்பர் 21ல் தண்ணீர் திறக்கப்பட்டது.

லோயர்கேம்ப் தலைமதகுப் பகுதியில் இருந்து போடி கடைமடை வரை 47 கி.மீ., துார கால்வாயில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. கரைப்பகுதியில் இலவம், முருங்கை, தென்னை, கம்பு, மொச்சை, எள் ஆகிய பயிர்களை நடவு செய்து கரையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் கால்வாய் தூர் வாராமல் இருப்பதால் புதர்களாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் தலைமதகு பகுதியில் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணி முடிந்தவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. அதன்பின் தொட்டிப் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டாவது முறையாக தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைக்கப்பட்ட பின் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக கால்வாயில் முழுமையாக தண்ணீர் செல்லாமல் 44 கண்மாய்களில் 5 மட்டுமே நிரம்பியது. இதனால் கடந்த ஆண்டு 18ம் கால்வாய் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. இதனால் 18ம் கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறக்க நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டாவது நிதி ஒதுக்கீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us