ADDED : ஜூன் 28, 2025 06:51 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 2000 கன அடியாக குறைக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து ஜூன் 15 முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு ஜூன் 25ல் வினாடிக்கு 3000 கனஅடி வீதம் நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. அந்த நீரின் அளவு நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 2000 கன அடியாக குறைக்கப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது. தற்போது அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2969 கன அடி நீர் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 60.99 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி).நீர் வரத்து வினாடிக்கு 1705 கன அடி. பாசனத்திற்கு தொடர்ந்து நீர் வெளியேறுவதால் இரு நாட்களில் அணை நீர்மட்டம் 2 அடி குறைந்துள்ளது.