ADDED : மே 31, 2025 12:45 AM

பெரியகுளம்: வடுகபட்டியில் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாகிறது.
பெரியகுளம் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வடுகபட்டி பேரூராட்சி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பாட்டி ஊராட்சிகளுக்கு தினமும் பேரூராட்சிக்கு 3 லட்சம் லிட்டரும், ஊராட்சிகளுக்கு தலா 2 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
கூட்டு குடிநீர் ஆதாரம் இருந்தும் தினமும் 50 ஆயிரம் லிட்டர் வழங்குவதற்கே குடிநீர் வாரியம் திணறுகிறது.
கடந்த மாதம் ஜெயமங்கலம் ஊராட்சியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை.
சாக்கடையில் கலக்கும் குடிநீர்: வடுகபட்டியிலிருந்து மேல்மங்கலம் செல்லும்ரோடு பழைய சினிமா தியேட்டர் பஸ்ஸ்டாப் அருகே இடதுபுறம் சில தினங்களாக சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் குழாய் உடைந்து, சாக்கடையில் வீணாக கலக்கிறது.
இதனால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. குடிநீர் வாரியம் உடனடியாக உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-