Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஊராட்சிகளில் பொது சுகாதாரம் கேள்விக்குறி: போதிய துாய்மை பணியாளர்கள் இன்றி தவிப்பு

ஊராட்சிகளில் பொது சுகாதாரம் கேள்விக்குறி: போதிய துாய்மை பணியாளர்கள் இன்றி தவிப்பு

ஊராட்சிகளில் பொது சுகாதாரம் கேள்விக்குறி: போதிய துாய்மை பணியாளர்கள் இன்றி தவிப்பு

ஊராட்சிகளில் பொது சுகாதாரம் கேள்விக்குறி: போதிய துாய்மை பணியாளர்கள் இன்றி தவிப்பு

ADDED : ஜூன் 16, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
கம்பம்: ''மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தேவைப்படும் துாய்மை பணியாளர்கள் இல்லாததால், ஊராட்சிகளில் பொதுச் சுகாதார பணிகள் கேள்விக்குறியாகி வருகின்றன. தேவையான துாய்மை பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெரு விளக்குகள், பொதுச் சுகாதாரம் பராமரிப்பு போன்ற பணிகளை கையாள்வதில் நீண்ட காலமாக சிக்கல் நீடித்து வருகிறது.

பேரூராட்சிகள், நகராட்சிகளில் தேவையான அளவு பொது நிதி இருப்பு இருப்பதால், துாய்மை பணிகளில் சுணக்கம் இருப்பது இல்லை. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் போதிய நிதி வழங்கப்பட்டு உள்ளது. நகராட்சிகளில் துாய்மை பணிகள் தனியார்மயமாக்கப்பட்டு உள்ளது.

ஆனால், கிராம ஊராட்சிகள் அனைத்திலும் துாய்மை பணியாளர் எண்ணிக்கை ஒன்றிரண்டு என்ற நிலையில் தான் இன்றைக்கும் உள்ளது. ஒருவர் கூட இல்லாத ஊராட்சிகளும் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகம் செய்த போதும், போதிய துாய்மை பணியாளர்கள் நியமனம் இல்லை. இதனால் துாய்மை பணிகளில் பெரிய அளவில் தேக்க நிலை காணப்படுகின்றன. குப்பை மட்டுமில்லாமல் சாக்கடை சுத்தம் செய்யப்படுவதில்லை. பணியாளர்கள் பற்றாக்குறையால் ஊராட்சிகளில் துப்புரவு பணிகள் முடங்கியுள்ளன.

இதை சரி பண்ண ஒவ்வொரு ஊராட்சியிலும் அதன் பரப்பு, மக்கள் தொகை, சேகரமாகும் குப்பை அளவு, தற்போதுள்ள பணியாளர் எண்ணிக்கை அடிப்படையில் துாய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறையினர் கூறுகையில், ''ஊராட்சிகளில் தேவைப்படும் துாய்மை பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நியமனம் எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை.'', என்றனர்.

தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளிலும் இதே நிலை தான் உள்ளது. எனவே ஊராட்சிகளுக்கு தேவையான எண்ணிக்கையில் துாய்மை பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம், அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us