Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மின்மோட்டார்கள் திருட்டு: போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

மின்மோட்டார்கள் திருட்டு: போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

மின்மோட்டார்கள் திருட்டு: போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

மின்மோட்டார்கள் திருட்டு: போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

ADDED : ஜூலை 01, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
தேனி: விவசாய மின்மோட்டார்கள், ஒயர்கள் தொடர்ந்து திருடு போவதாக புகார் அளித்தும் போலீசார் கண்டு கொள்வதில்லை என பூமலைக்குண்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பூமலைக்குண்டு விவசாயி பெத்தணன் தலைமையில் விவசாயிகள் வழங்கிய மனுவில், 'பூமலைக்குண்டு கிராமத்தில் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்கள், ஒயர்கள், குழாய்கள் தொடர்ந்து திருடு போகிறது.

வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளும் திருடு போகிறது. தொடர் திருட்டு குறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை. இதனால் பயிர்கள் பாதித்து விவசாயத்தை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரினர்.

உத்தமபாளையம் தாலுகா மார்க்கையன்கோட்டை ஆதிதிராவிடர் காலனி 2வதுவார்டு தேவி உள்ளிட்டோர் பொதுமக்கள் வழங்கிய மனுவில், 'குடியிருப்பு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், ரோடு வசதி இன்றி உள்ளது.

வீடுகளை சுற்றி புதர் மண்டி உள்ளதால் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். அடிப்படை வசதிகளை செய்து தர பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட,' வேண்டும் என கோரினர்.

ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி ஜெ.ஜெ.நகர் ராஜா மனுவில், 'ஜக்கம்பட்டியில் மூன்று ரேஷன் கடைகள் உள்ளன.

இந்த கடைகளில் ஊழியர்களிடம் தனிநபர் ஒருவர் பணம் கேட்டும், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை மிரட்டி வாங்கி வெளிசந்தையில் விற்கிறார். அவர் மீதும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ரேஷன்கடைகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க,' வலியுறுத்தியிருந்தார்.

பேரூராட்சி மீது புகார்


பெரியகுளம் தாலுகா டி.கள்ளிபட்டி நேருஜிநகர் சோபிகா மனுவில், 'தென்கரை பேரூராட்சியில் வீட்டு வரி பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்தேன்.

அதிகாரிகள், மக்கள் பிரதிநிதி என சிலர் பெயர் மாற்றத்திற்கு பணம் வழங்கினால் தான் மாற்றம் செய்து தர முடியும் என கூறுகின்றனர். பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் என கோரியுள்ளார்.

பெண் தற்கொலை முயற்சி


கலெக்டர் கார் நிறுத்தும் பகுதிக்கு வந்த பெண் ஒருவர் பாட்டிலில் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்ற முயற்சித்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடமிருந்து பாட்டிலை பறித்தனர்.

தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை தேனி மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் கூறுகையில், அப்பெண் சீப்பாலக்கோட்டை மாரியம்மன் கோவில் தெரு யோகராணி 28, என்றும்,அவர் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us