Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மடப்புரத்தில் 2வது நாளாக நீதிபதி விசாரணை

மடப்புரத்தில் 2வது நாளாக நீதிபதி விசாரணை

மடப்புரத்தில் 2வது நாளாக நீதிபதி விசாரணை

மடப்புரத்தில் 2வது நாளாக நீதிபதி விசாரணை

ADDED : ஜூலை 04, 2025 07:22 AM


Google News
Latest Tamil News
திருப்புவனம்; போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி 2வது நாளாக நேற்று விசாரணை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் மரணம் குறித்து மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால்சுரேஷ் திருப்புவனத்தில் விசாரணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஏ.டி.எஸ்.பி., சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், கோயில் ஊழியர்கள் பெரியசாமி, பிரபு, சக்தீஸ்வரன், கார்த்திக்வேலு, சீனிவாசன், ஆட்டோ டிரைவர் அருண், பிரவீன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

நேற்று 2வது நாளாக கோயில் ஊழியர்களான கார்த்திக்வேலு, சக்தீஸ்வரன்(வீடியோ எடுத்தவர்) பெரியசாமி,பிரபு ஆகியோரிடம் காலை 8:45 மணி முதல் விசாரணை நடத்திய நீதிபதி, சக்தீஸ்வரனை தவிர்த்து மற்றவர்களை அனுப்பி விட்டார். மதியம் சக்தீஸ்வரனையும் அனுப்பி விட்டார். மதியம் 3:00 மணிக்கு அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார்,உறவினர்கள் ரம்யா, சரவணன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். சம்பவம் நடந்த ஜூன் 28ம் தேதியன்று சிவகங்கை எஸ். பி., ஆஷிஷ் ராவத்தின் உத்தரவின் பேரில் வந்த எஸ்.ஐ., ராமச்சந்திரன் என்பவர் கோயிலில் சி.சி.டி.வி., கேமராக்களின் ஹார்டு டிஸ்க்கை எடுத்துச் சென்றுள்ளார். அந்த ஹார்ட் டிஸ்க்கில் போலீசார் அஜித்தை அறநிலையத்துறை அலுவலகம் பின்புறம் அழைத்துச் செல்வது, உயிரிழந்த பின் கோயில் ஊழியரான கார்த்திக்வேலு, வினோத் ஆகியோர் உதவியுடன் அஜித்குமாரை துாக்கி வந்து ஆட்டோவில் ஏற்றி செல்வது வரை பதிவானதாக கூறப்படுகிறது.

தற்போது ஹார்ட் டிஸ்க்கை போலீசார் கைப்பற்றி சென்றதால் அதில் உள்ள பதிவு அழிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எஸ்.பி.,யின் கீழ் உள்ள எஸ்.ஐ.,யே நேரடியாக வந்து கழற்றி சென்றதால் புகார் தாரர் நிகிதாவிற்கு நெருக்கமான அதிகாரி உத்தரவின் பேரில் தான் கழற்றி சென்றிருக்க முடியும் என கூறப்படுகிறது.

கோயில் உதவி ஆணையர் கணபதிமுருகன் கூறுகையில், போலீசார் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து விட்டு தான் ஹார்ட் டிஸ்க்கை கழற்றி சென்றனர், என்றார்.

ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதால் விசாரணை வேகமாக நடந்து வருகிறது.

ஜான்பாண்டியன் ஆறுதல்


அஜித்குமார் குடும்பத்தினருக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில் : இச்சம்பவத்திற்கு காரணமாக நிகிதாவை கைது செய்து விசாரிக்க வேண்டும், நிகிதா சார்பாக போலீசாருக்கு உத்தரவிட்ட அதிகாரி யார் என தெரியவேண்டும், அஜித்குமார் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும், என்றார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us