Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாவட்டத்தில் தென்னை பொருள் உற்பத்தி நிறுத்தம்: தென்னை நடவு செய்த விவசாயிகள் தவிப்பு 

மாவட்டத்தில் தென்னை பொருள் உற்பத்தி நிறுத்தம்: தென்னை நடவு செய்த விவசாயிகள் தவிப்பு 

மாவட்டத்தில் தென்னை பொருள் உற்பத்தி நிறுத்தம்: தென்னை நடவு செய்த விவசாயிகள் தவிப்பு 

மாவட்டத்தில் தென்னை பொருள் உற்பத்தி நிறுத்தம்: தென்னை நடவு செய்த விவசாயிகள் தவிப்பு 

ADDED : ஜூன் 15, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் தென்னை சார்ந்த பொருள்கள் உற்பத்தி வெகுவாக குறைந்ததால் விவசாயிகள் பெரும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

மாவட்டத்தில் திருப்புவனம், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இப்பகுதியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னையில் தேங்காய், இளநீர் தான் முக்கிய பொருளாக இருந்தாலும் விவசாயிகளுக்கு கை கொடுப்பது தென்னை மட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் தான். தென்னை மட்டைகளில் இருந்து கிடுகுகள், தட்டிகள், விசிறிகள், துடைப்பங்கள் உள்ளிட்டவைகள் தயாரிக்கின்றனர். அதேபோன்று தேங்காய் மட்டைகளில் இருந்து கயிறு, நார் மெத்தை அதிகளவு லாபம் தருவதால், அவற்றையும் தயாரிக்கின்றனர். விவசாயிக்கு குறைந்த பட்சம் 100 முதல் ஆயிரம் தென்னை மரங்கள் வரை வளர்க்கின்றனர். தென்னந்தோப்புகளுக்கு காவலுக்கு ஆட்கள் இல்லாவிட்டால் திருட்டு அதிகளவு நடைபெறும். பெரும்பாலும் தென்னந்தோப்புகளில் காவலுக்கு குடும்பமாக தான் ஆண்டு சம்பளத்தில் ஈடுபடுவார்கள். வருடம் முழுவதும் தென்னந்தோப்புகளில் மட்டைகளை சேகரித்து தட்டி, விசிறி, துடைப்பம் தயாரித்து வருவாய் ஈட்டலாம் என கூலி தொழிலாளர்கள் பலரும் வருவார்கள். சமீப காலமாக தட்டி, கிடுகு, விசிறி உள்ளிட்டவற்றிற்கு வரவேற்பு குறைந்ததால் அவற்றை தயாரிக்கும் தொழிலாளர்களும் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் தென்னந்தோப்புகளுக்கு காவலுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. மரத்தில் இருந்து விழும் தென்னை மட்டைகளை தீ வைத்து அழிக்கின்றனர். திருப்புவனம், லாடனேந்தல், மடப்புரம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் பகுதிகளில் தயாரிக்கப்படும் தட்டிகள், துடைப்பங்கள் கடலோர பகுதிகளான தூத்துக்குடி, சாயல்குடிக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். தட்டிகள், கிடுகுகளை விரும்பாததால் உற்பத்தி குறைந்து விட்டது.

இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது, தேங்காய், கொப்பரை தேங்காய்க்கும் நிரந்தர விலை கிடைப்பதில்லை. உபரி தொழிலும் கை கொடுக்கவில்லை. மரத்தில் தேங்காய் காய்ப்பு திறனும் குறைந்து வருகிறது. புதிதாக யாரும் தென்னை மரங்கள் வளர்க்க முன்வரவில்லை. இருக்கும் மரங்களையும் வெட்டி அகற்றி விட்டு வேறு விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். தென்னை சார்ந்த பொருட்களுக்கு அரசு முக்கியத்துவம் தராவிட்டால் தென்னை விவசாயம் விரைவில் இறங்கு முகத்திற்கு செல்லும், என்றனர்.

//





      Our Apps Available On




      Dinamalar

      Follow us