ADDED : ஜூன் 06, 2024 05:57 AM

சிவகங்கை : பிளஸ் 1 மாணவர்கள் முதல்வர் திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்று மாதந்தோறும் ரூ.1000 பெற ஜூன் 11 முதல் விண்ணப்பிக்கலாம்.
2024--25ம் கல்வியாண்டிற்கான தமிழக முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் 2023--24ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயின்று தற்போது பிளஸ் 1 படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள், 500 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் (மாதம் ரூ.1000 வீதம்) ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
தமிழக அரசின் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்படும்.
முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள்60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும்.
முதல் தாள் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரையிலும் 2ம் தாள் மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரையிலும் நடைபெறும்.
மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை ஜூன் 11 முதல் 26 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூ.50ம் சேர்த்து ஜூன் 26ம் தேதி மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.