Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மத்திய பட்ஜெட் : பொது மக்கள் கருத்து

மத்திய பட்ஜெட் : பொது மக்கள் கருத்து

மத்திய பட்ஜெட் : பொது மக்கள் கருத்து

மத்திய பட்ஜெட் : பொது மக்கள் கருத்து

ADDED : ஜூலை 24, 2024 06:17 AM


Google News
Latest Tamil News

விவசாயிகளுக்கு எதுவும் இல்லை


எல்.ஆதிமூலம், பொதுச் செயலாளர் முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சிவகங்கை மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு திருப்தியா என்றால் இல்லை. தமிழகத்தில் பேரிடர் வெள்ள காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு இனி எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க பாசன கட்டமைப்புகளை குறிப்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு திட்டமான கோதாவரி - காவிரி -வைகை- குண்டாறு திட்டம் செயல்படுத்துவது முக்கியமானது. பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை. விவசாய கடன்களை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என பிரிக்காமல் விவசாயத்திற்கு பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்தாத நிலையில் தள்ளுபடி செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை . விவசாய கூலி தொழிலாளிகளுக்கான வேலை வாய்ப்பு உற்பத்தி துறையிலேயே காய்கறி சாகுபடிக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எண்ணெய் வித்து , தானியங்கள், சிறுதானிய உற்பத்தி இன்னும் பல்வேறு உணவு தானிய உற்பத்தியில் நமது அடைய வேண்டியது உள்ளது. அதற்கான முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பட்ஜெட்டாக இது இல்லை.

ஊழியர் நலனுக்கு எதிரான பட்ஜெட்


பி.கண்ணதாசன், மாவட்ட தலைவர் அரசு ஊழியர் சங்கம், சிவகங்கை

மத்திய பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டனர். பென்ஷன், ஒப்பந்தப்பணி நியமனம், வருமான வரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த கோரினோம். ஆனால், பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு இல்லை. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், காலமுறை சம்பள திருத்தம் ஆகியவை பற்றி பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லை. இந்த பட்ஜெட் முற்றிலும் ஊழியர்களின் நலனுக்கு எதிராக உள்ளது.

தொழில், பெண், கல்வி வளர்ச்சிக்கானது


ஆர்.ஜெயலட்சுமி, தொழில் முனைவோர், சிவகங்கை

மத்திய பட்ஜெட்டில், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். இதற்காக பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கியது, தொழில் நிறுவ வளர்ச்சிக்கு கைகொடுக்கும்.மேலும், இளைஞர்கள் அதிகளவில் சிறு, குறு தொழில்களில் ஆர்வம் செலுத்துவதற்கு பட்ஜெட் வழிகாட்டுகிறது. குறிப்பாக பெண்களுக்கான முத்ரா வங்கி கடன் ரூ.20 லட்சம், உயர்கல்விக்கான கடன் ரூ.10 லட்சம் வரை அதிகரித்திருப்பது பெண்கள் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.

வரிக்கான வருவாய் உயர்வுக்கு வரவேற்பு


ஜி.பர்வதரோகிணி, வரிசெலுத்துவோர் சிவகங்கை

மத்திய பட்ஜெட்டில், புதிய ரெஜிம் படி வரி செலுத்துவோருக்கு பயன் அளிக்கும் விதத்தில் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சம் முதல் 7 லட்சத்திற்கு 5 சதவீதம் வரி விதித்துள்ளனர். இது கடந்த முறையை விட வருமான வரி செலுத்துவதற்கான ஆண்டு வருவாயை ரூ.1 லட்சம் வரை அதிகரித்து காட்டியுள்ளனர். இது நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன் அளிக்கும். அதே போன்று குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான ஆண்டு வருவாய் வரியில் கழிவு தொகையை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தியது. பென்ஷனர்களுக்கு பயன் அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. முறையாக வரி செலுத்துவோருக்கு இந்த பட்ஜெட் சிறந்த பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு


வே.சுந்தரபாரதி, குடும்பத்தலைவர் சிவகங்கை

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் திட்டம் வரவேற்கதக்கது. முதல் முறையாக வேலைக்கு செல்வோரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக ரூ. 15 ஆயிரம் வரை செலுத்தப்படும் திட்டம், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்குதல்,வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம். வேளாண் துறையை டிஜிட்டல் மயமாக்க கவனம் செலுத்தப்படும் திட்டம். விவசாய பொருள்களாக கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம். முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு வரவேற்கத்தக்கது.

நடுத்தர குடும்பத்திற்கான பட்ஜெட்


கே.வெண்ணிலா, பேராசிரியர் அரசு மகளிர் கலை கல்லுாரி சிவகங்கை

தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்) ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள் ஓய்வூதியர்கள் பலன் பெறுவார்கள் என்பது வரவேற்கதக்கது. ஆனால் பழைய வரி விதிப்பு முறையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை குறைந்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தாமதம் ஆனால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெண்கள் பெயரில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யப்படும் போது முத்திரைத்தீர்வை குறைக்க பரிசீலனை உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கதக்கது. நடுத்தர குடும்பத்தினருக்கும், பெண்கள், சிறு வணிகர்களுக்கு ஏற்ற வகையிலும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

பெண்களுக்கான பட்ஜெட்


எஸ்.பி.இளவரசி, ஆடிட்டர், காரைக்குடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து புதிய சாதனை செய்துள்ளார். இதற்கு பெண்கள் மட்டுமின்றி தென்னிந்திய மக்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது, இதனால் தங்கத்தின் விலை ரூ. 4 ஆயிரம் வரை குறைய வாய்ப்புள்ளது. ரூ. 7 லட்சம் வரை வருமானம் உள்ள பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரை வரி கட்ட தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். இது பெண்கள் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பெண் குழந்தைகள், பெண்கள் என சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளனர். நடுத்தர மக்களுக்கு இந்த பட்ஜெட் பயனுள்ளதாக இருக்கும்.

தங்கம் வாங்க தங்கமான வாய்ப்பு


ச.ராகதீபா, குடும்பத்தலைவி ராம் நகர், மானாமதுரை

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் சாதனை மிகுந்த பட்ஜெட்டாக உள்ளது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்ததை தற்போது நிர்மலா சீதாராமன் முறியடித்து 7வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். கட்டுக்குள் விலைவாசி என்பதை தாரகமாகக் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகளிர்,ஏழைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் ரூ.20 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் மேம்பாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மகளிர் வரவேற்கின்றனர். தங்கம்,வெள்ளிக்கு சுங்கவரி 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கு 6.4 சதவீதமாகவும் வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக தங்கம் விலை குறைந்துள்ளதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மகளிர் தங்கம் வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று அலைபேசி உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை குறைய வாய்ப்புள்ளது.

கிராமப்புற விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு


ஆர்.சந்தோஷ்குமார், கடலை எண்ணெய் ஆலை உரிமையாளர், சிங்கம்புணரி வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் வேளாண் துறையை டிஜிட்டல்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளின் பல்வேறு வேலைகளை சுலபமாக்கும். உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்டவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது. இதன் மூலம் வானம்பார்த்த பூமி கொண்ட விவசாயிகளும் அதிகம் பயன்பெறக்கூடும். இது சார்ந்த எண்ணெய் ஆலைகள் வளர்ச்சி பெறும், மூடப்பட்ட ஆலைகள் மீண்டும் திறக்கப்படும், கிராமப்புறங்களில் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு எதுவும் இல்லை


மகபூப்பாட்சா, வர்த்தக சங்க தலைவர், தேவகோட்டை

மத்திய பட்ஜெட் சிறு வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளது. அவர்களுக்குத்தான் வரிக் குறைப்பு உள்ளது. வியாபாரிகளையும் பொதுமக்களையும் பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரி பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்த்தோம். வரியை குறைக்க வேண்டும் என கூறி வருகிறோம். ஜி.எஸ்.டி.யை பொறுத்தமட்டில் எளிதாக்கப்படும் என கூறி உள்ளார்களே தவிர தெளிவாக எதுவும் கூறவில்லை. ஆன்லைன் வர்த்தகமே வேண்டாம் என நாங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் ஆன்லைன் வியாபாரத்திற்கு வரியை குறைத்து உள்ளது ஏமாற்றமளிக்கிறது. பிளாஸ்டிக் வரி உயர்வால் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை பெரிதும் பாதிக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us