ADDED : ஜூன் 11, 2024 07:27 AM
சிவகங்கை : 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழா அன்று இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு தகுதியுடையவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காகஇந்திய அரசாங்கம் பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ வழங்க உள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணியாற்றியவர்களுக்கு வரும் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இவ்விருதுகள் தொழில், இனம், உத்யோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in ஆகிய இணையதளத்திலிருந்து விபரங்களை அறிந்து கொண்டு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தல் வேண்டும்.
தகுதியுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அதன் 3 நகல்களுடன் வரும் 2024 ஜூன் 28ம் தேதிக்குள்மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், சிவகங்கை மாவட்டம் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பித்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.