ADDED : ஜூன் 05, 2024 04:45 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பழங்கள், பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சைவ பிரியர்கள் விரும்பும் பிரியாணி, குருமா செய்ய பயன்படும் கறி பலா, தற்போது பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறியதாவது:
கறி பலாவில் அதிக நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, சத்துகள் நிறைந்துள்ளன. இதை கேரள மக்கள், விரும்பி உணவில் சேர்க்கின்றனர். இதில் சைவ பிரியாணி, குருமா வகைகள், பொரியல், கூட்டு, சில்லி போன்ற ஏராள உணவு வகைகள் தயாரித்து உட்கொள்கின்றனர்.
சென்னை, கோவை, திருச்சி, பெங்களுரூ உள்ளிட்ட இடங்களில் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளன. ஒரு கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. தண்ணீர் தேங்காத வயலில், 20 அடி இடைவெளியில் நடவு செய்யலாம்.
நடவு செய்த, 3 ஆண்டில் இருந்து, 25 ஆண்டுகள் மகசூல் பெறலாம். மூன்றாம் ஆண்டில் ஒரு மரத்துக்கு, 20 காய்கள், 5ம் ஆண்டு முதல், 50 முதல், 100 காய்கள் கிடைக்கும். ஒரு காய், 400 முதல், 800 கிராம் வரை இருக்கும். காய்களை இளம் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். மரத்தை உயரமாக வளர விடாமல், கவாத்து செய்ய வேண்டும். ஒரு ஆண்டில், 9 மாதங்கள் மகசூல் கிடைக்கும். குறைந்த பராமரிப்பு செலவில் நல்ல மகசூல் பெறலாம். விபரங்களுக்கு பனமரத்துப்பட்டி தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.