ADDED : செப் 21, 2025 01:22 AM
ஆத்துார்,:தலைவாசல் மார்க்கெட்டில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சம், 75 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனுார், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுதும், 32,000 ஏக்கரில் தென்னை சாகுபடி உள்ளது.
இங்கு விளையும் காய்கள் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்தும், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆனால் தென்னை பராமரிப்பு, தொழிலாளர் கூலி உயர்வு, தென்னையில் நோய் தாக்குதல் போன்ற செலவினங்களால், தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தென்னை விவசாயிகள், வியாபாரிகள் கூறியதாவது:
கடந்த ஆகஸ்டில், தலைவாசல் மார்க்கெட்டில் கிலோ தேங்காய், 40 முதல், 50 ரூபாயாக இருந்தது. தற்போது தேங்காய் எண்ணெய் கிலோ, 540 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கொப்பரைக்கும் நல்ல விலை கிடைப்பதால், தேங்காய்களை விற்கின்றனர். இன்று, தலைவாசல் மார்க்கெட்டில் தேங்காய் கிலோ, 65 முதல், 70 ரூபாய், சில்லரை விலையில் கிலோ, 70 முதல், 75 ரூபாய் வரை விற்பனையானது.
தென்னந்தோப்பு உரிமையாளர்களிடம் வாங்கக்கூடிய வியாபாரிகள், கிலோ, 55 முதல், 60 ரூபாய் வரை விற்கின்றனர்.
சில்லரை விலையில், 70 முதல், 75 ரூபாய் வரை கடைகளில் விற்கப்படுகிறது. ஒரு தேங்காய், 30 முதல், 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
எண்ணெய் தொழிற்சாலைகளுக்கு வியாபாரிகள் மூலம் மொத்தமாக தேங்காய்கள் அனுப்பப்படுகின்றன.
இதனால் உள்ளூர் தேங்காய் வரத்து குறைந்து, பொள்ளாச்சி காய் விற்பனைக்கு வருவதால், விலை அதிகரித்துள்ளது.
இந்த உயர்வுக்கு பின், 30 ரூபாயாக இருந்த இளநீர், தற்போது, 40 முதல், 50 ரூபாய், பெரிய அளவில் இளநீர், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.