Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மத்திய அரசு கடும் நடவடிக்கை: பருப்பு, வெங்காயம் விலை சரிவு

மத்திய அரசு கடும் நடவடிக்கை: பருப்பு, வெங்காயம் விலை சரிவு

மத்திய அரசு கடும் நடவடிக்கை: பருப்பு, வெங்காயம் விலை சரிவு

மத்திய அரசு கடும் நடவடிக்கை: பருப்பு, வெங்காயம் விலை சரிவு

ADDED : ஜன 30, 2024 03:18 PM


Google News
சேலம்:மத்திய அரசின் கடும் நடவடிக்கை காரணமாக பருப்பு, சீரகம், வெங்காயம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பயன்படுத்தப்படும் உளுந்து, துவரம் பருப்பு, சீரகம், சோம்பு, பெரிய, சின்ன வெங்காயம் ஆகியவை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

இவற்றின் விற்பனையை வடமாநில வியாபாரிகள் நிர்ணயம் செய்வதால், பதுக்கல் அதிகரித்தது.இதன் காரணமாக கடந்த மாதம் உளுந்து கிலோ, 170 ரூபாய், துவரம் பருப்பு, 160, சீரகம், 800, சோம்பு, 550, பெரிய வெங்காயம், 50, சின்ன வெங்காயம், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலுக்கு, சில மாதங்களே உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை, எதிர்க்கட்சிகள் பிரசாரத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக, மத்திய உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அளித்தது.இதையடுத்து பதுக்கலை தடுக்கும் வகையில், வடமாநிலங்களில் அதிகாரிகள் சோதனை துவக்கிய நிலையில் பருப்பு, வெங்காயத்தின் அறுவடையும் துவங்கியதால், மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக உளுந்து விலையில் கிலோவுக்கு, 30 ரூபாய் வரை சரிந்து, 120 முதல், 140 ரூபாய் வரையும், துவரம் பருப்பு, 20 ரூபாய் சரிந்து, 135 முதல், 140 ரூபாய் வரை விற்கிறது. சீரகம் விலையில் கிலோவுக்கு, 200 குறைந்து, 400 முதல், 600 ரூபாய் வரையும், சோம்பு விலையில் கிலோவுக்கு, 200 குறைந்து, 350 ரூபாய்க்கு விற்கிறது.சிறிய வெங்காயம் கிலோ, 80 ரூபாய்க்கு விற்றது, நேற்று கிலோ, 18 முதல், 25 ரூபாய் வரையும், பெரிய வெங்காயம் கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது, 20 முதல், 30 ரூபாய் வரை விற்றது. பருப்பு, சீரகம், வெங்காய விலையில் சரிவு ஏற்பட்டு இருப்பது, பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, சேலம் மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி கூறுகையில்,'' தமிழகத்தில் பருப்பு, சீரகம், வெங்காயத்தின் விலை கடந்த நவ., டிச., மாதங்களில் உச்சத்தை தொட்டது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறுவதை தடுக்க, மத்திய அரசு பதுக்கல் வியாபாரிகள் மீது சாட்டையை சுழற்றியது. அதன் காரணமாக, பொருட்கள் தங்கு தடையின்றி வரத் துவங்கி உள்ளதால், விலை சரிவை சந்தித்துள்ளது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us