Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து தம்பதி கொலை 70வது திருமணம் நடக்கவிருந்த நிலையில் பரிதாபம்

சேலத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து தம்பதி கொலை 70வது திருமணம் நடக்கவிருந்த நிலையில் பரிதாபம்

சேலத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து தம்பதி கொலை 70வது திருமணம் நடக்கவிருந்த நிலையில் பரிதாபம்

சேலத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து தம்பதி கொலை 70வது திருமணம் நடக்கவிருந்த நிலையில் பரிதாபம்

ADDED : மே 12, 2025 04:06 AM


Google News
சேலம்: சேலத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து தம்பதியை, மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், ஜாகீர் அம்மாபாளையம், எட்டிக்குட்டை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன், 70. வீட்டில் மளிகை கடை நடத்துகிறார். இவரது மனைவி வித்யா, 65. இவர்களது மூத்த மகன் ராமநாதன், 45. இளைய மகன் வாசுதேவன், 43. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ராமநாதன், அருகே உள்ள தர்மன் நகரில் வசித்து, மருந்து விற்பனை தொழில் செய்கிறார். வாசுதேவன், பாஸ்கரன் வீட்டின் மேல் பகுதியில் வசித்து, பால் வினியோகம் தொழில் செய்கிறார்.

நேற்று மதியம், 3:30 மணிக்கு, பாஸ்கரன் கடையை திறந்து வைத்துவிட்டு, வீட்டில் இருந்தார். உடன் வித்யாவும் இருந்தார். அப்போது வீட்டில் இருந்து சத்தம் வந்தது. உடனே வாசுதேவன், கீழே இறங்கி வந்து பார்த்தபோது, வித்யா வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். பாஸ்கரன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், பாஸ்கரனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது வழியில் உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் லில்லி மூலம் சோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து ராமநாதன் கூறுகையில், ''தந்தைக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தோம். இன்று பழநிக்கு செல்ல திட்டமிட்டு, பழம், பூ வாங்கி வைத்திருந்தோம். அதில் எல்லாம் ரத்தம் படிந்துள்ளது. அடுத்த மாதம் பெற்றோருக்கு, 70வது திருமணம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், சம்பவம் நடந்துள்ளது. 16 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

கும்பலிடம் விசாரணை

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: 'வித்யா தலையில், மூன்று இடங்களில் ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளது. பாஸ்கரன் தலையிலும் வெட்டப்பட்டு, உயிருக்கு போராடி இறந்துள்ளார். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பலை பிடித்து விசாரிக்கிறோம். இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us