/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 7 கிராம மக்கள் உண்ணாவிரதம், கடையடைப்புமேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 7 கிராம மக்கள் உண்ணாவிரதம், கடையடைப்பு
மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 7 கிராம மக்கள் உண்ணாவிரதம், கடையடைப்பு
மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 7 கிராம மக்கள் உண்ணாவிரதம், கடையடைப்பு
மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 7 கிராம மக்கள் உண்ணாவிரதம், கடையடைப்பு
ADDED : பிப் 06, 2024 11:19 AM
ஆத்துார்: வட சென்னிமலையில், ரயில்வே சுரங்கப்பாதையை தவிர்த்து, மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, ஏழு கிராம மக்கள் உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே வடசென்னிமலை வழியாக சேலம்-விருதாச்சலம் ரயில்பாதை செல்கிறது. இதில், வடசென்னிமலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டம் நடத்தி முதல்வர், சேலம் கலெக்டர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர்.
ஆனால், ரயில்வே துறை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி நேற்று, ஆத்துார் பயணியர் மாளிகை முன், சுரங்கப்பாதை எதிர்ப்பு குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் காட்டுக்கோட்டை, வடசென்னிமலை, சார்வாய்புதுார், சதாசிவபுரம், சாத்தப்பாடி, ஒதியத்துார், வளையமாதேவி, புனல்வாசல் ஆகிய ஏழு ஊராட்சிகளை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் காட்டுக்கோட்டை, வடசென்னிமலை பகுதியில், 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. ஐக்கிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் சங்கரய்யா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், உழவர் மன்ற கூட்டமைப்பு, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம், உழவர் மன்ற கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, சுரங்கப்பாதை எதிர்ப்பு குழு நிர்வாகிகள் ராஜேந்திரன், சரவணன் கூறியதாவது:
வடசென்னிமலை ரயில்வே கேட் பகுதியில், சுரங்கப்பாதை அமைத்தால் கரும்பு, மஞ்சள், பருத்தி போன்ற விளை பொருட்களை லாரிகளில் எடுத்து செல்ல முடியாது. ரிக் வாகனம், கனரக வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்படும். மழை நீர் தேங்கும் பகுதியாக உள்ளதால், சுரங்கப்பாதையை தவிர்த்து, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு கூறினர்.